வீட்டு வாசலில் விமானம், தெருவே ரன்வே! ஆச்சரியத்தில் ஆழ்த்தும் அமெரிக்க நகரம்
புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்
புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த சடலத்தைக் கைப்பற்றிய ஒதியஞ்சாலை போலீஸார், உடற்கூராய்வு சோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அத்துடன் கொலை செய்யப்பட்டவர் யார் என்பது குறித்த விசாரணையையும் துவக்கினர். அப்போது கொலை செய்யப்பட்டவர் சந்துரு என்பதும், அவர் நைனார்மண்டபம் பகுதியில் கோழிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தவர் என்பதும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவரது செல்போனை கைப்பற்றிய போலீஸார், கொலை செய்யப்படுவதற்கு முன்பு சந்துருவுடன் கடைசியாகப் பேசிய வெங்கடேசன் என்ற நபரை தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், போலீஸாருக்கு வெங்கடேசன் மீது சந்தேகம் எழுந்தது.
அதையடுத்து தொழில்நுட்பத்தின் உதவியுடன் அவரை வளைத்துப் பிடித்த போலீஸார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சந்துருவை கொலை செய்ததாக ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் வெங்கடேசன்.
அதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ராஜேஷ், சரண் என்ற இருவரையும் கைது செய்திருக்கின்றனர்,
இந்த வழக்கு குறித்து நம்மிடம் பேசிய விசாரணை அதிகாரிகள், ``கொலை செய்யப்பட்ட சந்துருவும், அவரை கொலை செய்த வெங்கடேசனும் ஒரே கடையில் வேலை செய்த நண்பர்கள்.
ஒரு நாள் தன்னுடைய செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆனதால், சந்துருவின் போனில் இருந்து தன்னுடைய மனைவி காவியாவிடம் பேசியிருக்கிறார் வெங்கடேசன். அதன்பிறகு காவியாவின் செல்போன் எண்ணை தன்னுடைய செல்போனில் சேமித்துக் கொண்ட சந்துரு, காவியாவிடம் அடிக்கடி வாட்ஸ்-அப்பில் பேசி வந்திருக்கிறார்.
அதனடிப்படையில் இருவரும் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் திருமண உறவைத் தாண்டிய நட்பாக வளர்ந்திருக்கிறது.

ஒருகட்டத்தில் வெங்கடேசனை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காவியாவை தொல்லை செய்திருக்கிறார் சந்துரு.
அதில் அதிர்ச்சியடைந்த காவியா, சந்துரு தன்னை தொல்லை செய்வதாக கணவர் வெங்கடேசனிடம் கூறியிருக்கிறார். அதையடுத்து சந்துருவை தொடர்பு கொண்ட வெங்கடேசன், தன்னுடைய மனைவியை தொல்லை செய்யக் கூடாது என்று எச்சரித்திருக்கிறார்.
அப்போது, `எனக்கு மிகப் பெரிய ரௌடிகளுடன் தொடர்பு இருக்கிறது. அதனால் என்னிடம் மோதாதே, உன் பொண்டாட்டியை என்னுடன் அனுப்பிவிடு. அவகூட வாழறதுக்கு உனக்கு எந்தத் தகுதியும் இல்லை’ என்று மிரட்டியிருக்கிறார்.
அதில் கோபமடைந்த வெங்கடேசன், ரெட்டியார்பாளையம் பகுதியைச் சேர்ந்த தன்னுடைய பள்ளித் தோழன் சரண் என்பவரிடம் தெரிவித்திருக்கிறார். அந்த சரண், அவனுடைய ரௌடி நண்பனான ராஜேஷை தொடர்பு கொண்டு, சந்துருவை கொலை செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறான்.
தொடர்ந்து மூன்று பேரும் சந்துருவை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதன்படி கொலை செய்யப்பட்ட சந்துரு, வாடகைக் காரும் வைத்திருந்திருக்கிறார். அதனால் நவம்பர் 1-ம் தேதி சந்துருவுக்கு போன் செய்த வெங்கடேசன், திருச்செந்தூர் செல்ல வேண்டும் என்று கூறி அவரது காரை வாங்கி வந்திருக்கிறார்.
அதையடுத்து அன்று மதியமே சந்துருவுக்கு போன் செய்த வெங்கடேசன், காரில் கிலோமீட்டரை வந்து குறித்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார்.

அதன்படி வெங்கடேசனின் வீட்டுக்குச் சென்றிருக்கிறார் சந்துரு. அப்போது அங்கிருந்த வெங்கடேசன், சரண், ராஜேஷ் மூன்று பேரும் சந்துருவை வளைத்துப் பிடித்து, சரமாரியாக அரிவாள்களால் வெட்டியிருக்கிறார்கள்.
அதில் சரிந்து விழுந்த சந்துரு, அடுத்த சில நிமிடங்களில் செத்துவிட்டார். அப்புறம் சாக்கு மூட்டையில் வைத்துக் கட்டி ஓரமாக வைத்த அவர்கள், வீட்டில் இருந்த ரத்தத்தை கழுவியிருக்கிறார்கள். அதன்பிறகு 2-ம் தேதி அதிகாலை சந்துருவின் காரிலேயே அவனது உடலை எடுத்துச் சென்று, பாண்டி மெரீனா செல்லும் சாலையில் வீசிவிட்டு தலைமறைவாகி விட்டார்கள்.
அதேபோல சந்துருவை கொலை செய்வதற்கு முன்பே, தன்னுடைய மனைவியை உறவினர்களுடன் ஊருக்கு அனுப்பிவிட்டான் வெங்கடேசன். `சந்துரு என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான். அதனாலதான் அவன் கதையை முடிச்சிட்டேன்’ என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்’ என்றனர்.





















