`அன்று கருணாநிதி ஒழிக; இன்று ஸ்டாலின் வாழ்க’ - கட்சித் தாவிய அதிமுக முன்னாள் அமை...
”மகளிர் உரிமைத் தொகைக்கு முட்டுக்கட்டை போட நினைத்ததை முதல்வர் தகர்த்து விட்டார்” - உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் ரூ.20 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ், கோவி.செழியன், எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதற்கு உதயநிதியை வரவேற்கும் விதமாக சாலையின் ஒரு பகுதியை இரண்டு கிலோ மீட்டர் தூரத்துக்கு வாழை மரங்கள் மற்றும் கரும்பால் அலங்காரம் செய்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்தும் முடியாமலும் வாழைத்தார் மற்றும் கரும்பை பலர் எடுத்துச் சென்றனர்.
இதில் உதயநிதி பேசியதாவது, ''பட்டுக்கோட்டை மிக நீண்ட பாரம்பர்யம் கொண்ட ஊர். மிக வேகமாக வளர்ந்து வரும் நகராட்சியாகத் திகழ்கிறது.

ஆனால், இந்த நகரத்தின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கின்ற வகையில் ஒரு பேருந்து நிலையம் இல்லை. திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு, இந்நகரின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதற்கு ஒரு உதாரணம்தான் இந்தப் பேருந்து நிலையம்.
இந்நகரின் எதிர்கால வளர்ச்சியைக் கருதி, இந்தப் பேருந்து நிலையம் தாராளமான இட வசதியோடு, அதிநவீனமான கட்டமைப்பு வசதிகளோடு கட்டப்பட்டுள்ளது. தமிழக முதல்வரைப் பொறுத்தவரைக்கும், "எல்லா ஊருக்கும் எல்லாம்" என்ற கொள்கையில் அனைத்து ஊர்களிலும் வளர்ச்சிப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக 30 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டுள்ளனர். 60 ஆயிரம் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வழங்கப்படுகிறது. 32,000 மாணவ, மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் பயன் பெற்று வருகின்றனர்.
35,000 கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்லாத் திட்டங்களையும் விட முக்கியமான ஒரு திட்டம் உள்ளது, அதுதான் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம். இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த திட்டத்தின் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்படுகிறது.

இன்றைக்கு இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப் பலர் திட்டமிட்டனர், இந்தச் சூழ்ச்சிகளையெல்லாம் முதல்வர் தகர்த்தெறிந்து, இன்றைக்கு ரூ.5,000 மகளிருக்குக் கொடுத்துள்ளார். அடுத்து ஆட்சிக்கு வந்ததும் ரூ.2,000 மாதந்தோறும் வழங்கப்படும் என முதல் தேர்தல் வாக்குறுதியாக முதல்வர் அறிவித்துள்ளார்.
இப்படி மக்கள் நலத் திட்டங்களாக இருந்தாலும் சரி, பேருந்து நிலையம் போன்ற உட்கட்டமைப்புப் பணிகளைச் செய்வதாக இருந்தாலும் சரி, தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
இந்த மாதிரியான வளர்ச்சிப் பணிகள் தொடர வேண்டும், தமிழ்நாடு மென்மேலும் முன்னேற்றம் அடைய வேண்டுமானால், அதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தொடர வேண்டும்'' என்றார்.
முன்னதாக திமுக பிரமுகர் பழஞ்சூர் செல்வம் இல்லத் திருமண விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியது, ''தமிழ்நாடு இந்தியாவிலேயே 11.19% வளர்ச்சியோடு இன்றைக்கு முதல் மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாத பாஜக அரசு எவ்வளவோ சதித் திட்டங்களைத் தீட்டுகிறது.
நிதி உரிமையைப் பறிக்கின்றார்கள். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு திட்டம்கூட கிடையாது. ஆனால் இந்தப் பட்ஜெட்டை அதிமுகவினர் வரவேற்கின்றனர்.

எடப்பாடி பழனிசாமிதான் இன்றைக்கு இந்தியாவிலேயே பாஜகவுடைய 'முரட்டு அடிமை'. ஜாடிக்கு ஏத்த மூடின்னு சொல்லுவாங்க, இன்றைக்கு மோடிக்கு ஏத்த மூடியாக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார்.
இனிமேல் 10 தோல்வி பழனிசாமியும், மொத்த தோல்வி மோடியும் என்னதான் பாடுபட்டாலும் தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. எனவே, மீண்டும் அமையப் போறது திமுக அரசுதான்'' என்றார்.













