`உழைக்கும் வர்க்கமே... உலகம் உனதே!' - `May 1' தூய்மை காக்கும் தொழிலாளர்கள் | புக...
`மராத்தி மொழி கட்டாயம் கத்துக்கணும்' - ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு கெடு நீட்டிப்பு!
மகாராஷ்டிராவில் மும்மை, புனே, நாசிக், நாக்பூர் போன்ற பகுதியில் ஆயிரக்கணக்கான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மராத்தி இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதையடுத்து மே ஒன்றாம் தேதியில் இருந்து ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களின் மராத்தி திறன் சோதிக்கப்படும் என்றும், மராத்தி தெரியாத ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்றும் மாநில போக்குவரத்து துறை சர்நாயக் தெரிவித்து இருந்தார். இதனால் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதோடு மராத்தி தெரியாத ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் தாக்குதலுக்கு உள்ளானார்கள். இதனால் ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

மேலும் அரசின் நடவடிக்கைக்கு பயந்து அதிகமான வெளிமாநில ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆரம்பித்தனர். இதையடுத்து டாக்சி மற்றும் ஆட்டோ யூனியனுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டது.
மேலும் இவ்விவகாரத்தில் மாநில அரசு இறங்கி வந்திருக்கிறது. பொதுபோக்குவரத்துகளான ஆட்டோ மற்றும் டாக்சி டிரைவர்கள் மராத்தி கற்றுக்கொள்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 15ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இது குறித்து முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில்,''மகாராஷ்டிராவில் வசிக்கும் அனைவரும் கட்டாயம் மராத்தி கற்றுக்கொள்ள வேண்டும். இம்மொழியைக் கற்றுக்கொள்ள முயல்பவர்கள் வரவேற்கப்படுகிறார்கள். இன்னும் இம்மொழி அறியாதவர்களுக்கு நாங்கள் கற்றுக்கொடுப்போம். மொழியின் பெயரில் வன்முறையில் ஈடுபடுவதோ அல்லது ஒருவருக்கு அந்த மொழி தெரியவில்லை என்பதற்காக அவரைத் தாக்குவதோ எங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியல்ல.
இதை நாங்கள் துளியும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். மராத்தி மொழி அழகானது. கற்றுக்கொள்வதற்கு மிகவும் எளிமையானது. எனவே மகாராஷ்டிராவில் வசிக்கும் அனைவரும் மராத்தியை கற்றுக்கொள்ளமுன்வரவேண்டும்' 'என்று தெரிவித்தார். முன்னதாக தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா தினமான இன்று மகாராஷ்டிரா உருவாக தங்களது உயிரை தியாகம் செய்தவர்கள் நினைவாக கட்டப்பட்டுள்ள நினைவகத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் நடந்த மகாராஷ்டிரா தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.















