பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
மள்ளர் சேனை : ஒருபக்கம் பிற கட்சி பிரமுகர்கள்; மற்றொரு பக்கம் சமூக அமைப்புகள் - தவெக பிளான் என்ன?
தமிழக அரசியல் களத்தில் தேர்தல் ஜுரம் பற்ற தொடங்கிவிட்டது. ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் தேர்தல் பணிகளை முழு வீச்சில் செய்ய தொடங்கிவிட்டன. தமிழக வெற்றிக் கழகமும் மற்ற கட்சிகளைப்போல அரசியல் பகடைகளை உருட்ட ஆரம்பித்துள்ளது .

மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையனை கட்சியில் இணைத்ததன் மூலம் தி.மு.க, அ.தி.மு.க தலைமையை அதிர வைத்த த.வெ.க, தற்போது முக்கிய கட்சிகளில் ஓரங்கட்டுப்பட்டுள்ள அல்லது அதிருப்தியுடன் உள்ள பிரமுகர்களை தவெக-வுக்கு நகற்றிக் கொண்டுவரும் பிளானில் தீவிரமாக இறங்கியுள்ளது.
கொங்கு மாவட்டங்களிலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள முக்கிய கட்சியினரை ஈரோடு நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து விஜய் முன்னிலையில் கட்சியில் இணைக்கின்ற பொறுப்பு செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் நிலையில், தென் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளே பிற கட்சி பிரமுகர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காங்கிரஸ் பிரமுகர் திருச்சி வேலுச்சாமி, அதிமுக-விலிருந்து ஒதுங்கி இருக்கும் மதுரை கிரம்மர் சுரேஷ் உள்ளிட்டோரை தவெக-வினர் அணுகி வருவதாக சொல்லப்படும் போது, இன்னும் சில பிரமுகர்களின் பெயர்களும் அடிபடுகிறது.
அதில் முக்கியமாக, ராமநாதபுரம் முன்னாள் திமுக எம்பி, அ.தி.மு.க-விலிருந்து தி.மு.க-வுக்கு சென்ற இரண்டு மாஜி அமைச்சர்கள், மறைந்த சிவகங்கை மாஜி அமைச்சரின் உறவினர், அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிவகங்கை மாஜி அமைச்சர், அதே மாவட்ட அ.தி.மு.க மாஜி எம்.பி, திமுக பெண் பிரமுகர், தூத்துக்குடி திமுக மாஜி எம்பி, விருதுநகர் மாவட்ட அதிமுக மாஜி அமைச்சர், மதுரை அ.ம.மு.க-விலுள்ள பெண் பிரமுகர், சிவகங்கை காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏ என்று பட்டியல் நீள்கிறது.
இன்னொரு பக்கம், ஒவ்வொரு மண்டலத்திலும் செல்வாக்குள்ள சாதி சார்ந்த கட்சிகளையும், அமைப்புகளையும் தங்களுக்கு ஆதரவாகக் கொண்டு வரும் வேலையிலும் தீவிரமாக இறஙகியுள்ளனர்.
ஏற்கனவே மறவர், அகமுடையார், தேவேந்திர குல வேளாளர், ஆதி திராவிடர், அருந்ததியர், வெள்ளாளர், உடையார், பரதவர், யாதவர் அமைப்புகளும், கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கட்சியினர் சொல்கிறார்கள்.

டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், ஜான் பாண்டியனின் த.ம.மு.க ஆகிய கட்சிகள் கடந்த காலங்களில் பல்வேறு கூட்டணிகளில் இடம்பெற்று தேர்தலை சந்தித்திருந்தாலும் கூட்டணில் கட்சிகளின் உள்ளடி வேலைகளால் வெற்றியை எட்ட முடியாததால் அரசியலில் ஒரு சக்தியாக எழமுடியவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி சமீபகாலமாக த.வெ.க-வுக்கு ஆதரவாக பேசி வந்தார். ஆனாலும் சில காரணங்களால் த.வெ.க தலைமை இவரை ஹோல்ட் பண்ணி வைத்துள்ளதாம்.
இந்நிலையில் தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 'மள்ளர் சேனை' என்ற அமைப்பின் தலைவர் த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்தை சமீபத்தில் சந்தித்துள்ளது தற்போது தென் மாவட்ட அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மள்ளர் சேனையின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் சோலை பழனிவேல்ராசனிடம் பேசினேன், "தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜைக்கும், அதைத் தொடர்ந்து தேவர் குருபூஜைக்காகவும் த.வெ.க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மதுரை வந்தபோது மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். எங்கள் அமைப்பு குறித்து கேட்டார், பின்பு தென் மாவட்ட அரசியல் சூழல் குறித்து இருவரும் பேசினோம், மேலும் தேவேந்திர குல வேளார்கள் மக்களின் நீண்டகால கோரிக்கையான பட்டியல் வெளியேற்றம், அரசியல், அதிகாரத்தில் மக்கள் தொகைக்கேற்ப பிரதிநதித்துவம் குறித்தும் விளக்கினேன்,," என்றவர்,
தொடர்ந்து பேசும்போது, "தமிழ்நாட்டு அரசியலில் சுப்பிரமணியசுவாமி பரபரப்பாக செயல்பட்ட 96 காலகட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் அவருடன் பயணித்தார்கள், அப்போது, டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டபிடாரத்தில் ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார், அதிலிருந்துதான் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். அப்போது நானும் சமயநல்லூரில் போட்டியிட்டு பொது வாழ்க்கையில் தீவிரமாக இயங்கத் தொடங்கினேன். அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், பல்வேறு அமைப்பினருடனும் நெருக்கமாக பழகுவேன்.

தென் மாவட்டத்தில் மட்டுமின்றி டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களில் பெருவாரியாக வாழும் தேவேந்திரகுல வேளாள மக்கள் அரசியல் அதிகாரத்தில், பொருளாதாரத்தில் முன்னேறி வரவேண்டும், அனைத்து சமூகத்தினருடனும் இணக்கமாக வாழ வேண்டும் என்ற நோக்கில் மள்ளர் சேனையை ஆரம்பித்து 'சுய சாதிப் பற்று, பிற சாதி நட்பு' என்ற கொள்கையுடன் சமுதாய மக்களுக்கு செயல்பட்டு வருகிறேன். ஒவ்வொரு தேர்தலின்போதும் நம் சமூகத்துக்கு நன்மை செய்வார்கள் என்று தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்து வந்தாலும் வாக்குகளைப் பெற்ற பின் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எந்த நன்மையும் செய்வதில்லை.
வாக்கு வங்கியாக மட்டும் வைத்துக்கொண்டு தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் எங்கள் மக்களை ஏமாற்றுகிறது, சமீபகாலமாக தேவேந்திர குல மக்கள் இந்தக் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்துவிட்டார்கள். அதனால், அனைத்து சமுதாய மக்களையும் சமமாக பார்க்கும், இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் சொல்ல முடியாத, இளைஞர்கள் விரும்புகின்ற விஜய் தலைமையிலான த.வெ.க மீது எங்கள் மக்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது, இதை த.வெ.க பயன்படுத்திக்கொள்ள முன் வரவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்" என்றார்.

மள்ளர் சேனையுடன் த.வெ.க நிர்வாகிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். இதுபோல் இன்னும் பல சமூக அமைப்புகளுடன் தவெக தலைமை தொடர்பு கொண்டு வருகிறது.
இதற்கிடையே திருவாரூரில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் இல்லத் திருமணத்துக்கு வந்த எஸ்.ஏ.சந்திரசேகரனை, திருச்சி வேலுசாமி சந்தித்துப் பேசியுள்ளதுபோல சோலை பழனிவேல்ராசனும் ஆனந்தை சந்தித்துப் பேசியுள்ள தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.














