"வெற்றிப் படைகள் எப்போதும் உங்களுடன் தொடரட்டும்"- விஜய்யை நேரில் சந்தித்தது குறி...
‘மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த தவறும் நடக்கவில்லை!’ – செந்தில் பாலாஜி சொல்லும் விளக்கம்
மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது மின்மாற்றிகள் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்பட்டதாக தொடர்ந்த வழக்கில், சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக கோவை பந்தய சாலை பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, “தமிழ்நாடு மின்சார வாரியம் மின்மாற்றிகள் கொள்முதல் செய்வதில், 1987 ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படும் நடைமுறையே தற்போதும் பின்பற்றப்படுகிறது. இதற்கு முன்பாகவும் பல ஆண்டுகளில் டெண்டரில் ஒரே தொகையை பலர் குறிப்பிட்டுள்ளார்கள். ஒரே தொகையை பலர் குறிப்பிட்டால், டெண்டரை பிரித்து தருவது வழக்கமான நடைமுறை தான்.டெண்டரை 3 அதிகாரிகள் குழுக்கள் தான் இறுதி செய்யும். இடையே ஆட்சிகள் மாறியபோதும், இதே நடைமுறை தான் பின்பற்றப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த 4, 5 ஆண்டுகளில் தான் தவறு நடந்ததாக பிரித்து ஒரு குறிப்பிட்ட அமைப்பு புகார் அளித்துள்ளது. அதற்கு முன்பும் இதே நடைமுறை இருந்ததை வசதியாக மறந்து, மறைத்து ஒரு சில கட்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசியல் காரணங்களுக்காக புகார் அளித்துள்ளார்கள்.
அவர்கள் சுயமாக செயல்படவில்லை. மின்மாற்றிகள் கொள்முதலில் எந்த இடத்திலும் தவறுகளுக்கு இடமில்லை. இதனால் அரசிற்கோ, மின்சார வாரியத்திற்கோ ஒரு நையா பைசா கூட இழப்பு ஏற்படவில்லை. சிபிஐ விசாரணை நியாயமாக நடக்குமா என பொருத்திருந்து பார்ப்போம். நீதிமன்றத்தின் முழு உத்தரவு வரவில்லை. வந்தால் தான் முழு விவரம் தெரியவரும்.

சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதை நெருக்கடி என பார்க்கவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர்களிடம் கலந்து பேசி அரசு நடவடிக்கை எடுக்கும். பொதுவெளியில் மக்கள் மன்றத்தில் வீழ்த்த முடியாதவர்கள், நீதிமன்றத்தில் செல்கிறார்கள். வழக்குத்தாக்கல் செய்யப்பட்டதால், அ.தி.மு.க, பா.ஜ.க நிர்வாகிகள் குற்றவாளி என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
கோவை வடக்கு தொகுதி பா.ஜ.க வேட்பாளர் என்னை பற்றி கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரும், உள்துறை அமைச்சரும் ஒரு முறை அ.தி.மு.க. அரசை பற்றி, எடப்பாடி பற்றி பேசியதை அவர் மறந்திருப்பார். அதை நான் நியாபகப்படுத்துகிறேன். அவற்றை ஒரு முறை திரும்ப பார்த்துவிட்டு, எங்களை பற்றி பேசினால் நியாயமாக இருக்கும்.
மக்களை சந்தித்து வாக்குகளை கேட்டு வெற்றி பெற முடியாதவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதும், தீர்ப்பு வந்தது போல தனிப்பட்ட முறையில் விமர்சனம், தாக்குதலை செய்வது ஏற்புடையது அல்ல. நிறைய அரசியல் தலைவர்கள் மீது வழக்கு இருக்கும். தீர்ப்பு வர வேண்டும். டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது போட்ட வழக்கு என்ன ஆனது? ஒரு வழக்கின் இறுதி தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அ.தி.மு.க, பா.ஜ.க.வினர் தங்களது மீதுள்ள வழக்குகளை விட்டு விட்டு, மற்றவர்கள் மீதுள்ள வழக்குகளை வசதியாக எடுத்துக் கொள்வார்கள்.” என்றார்.


















