கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album
”வொர்க் ப்ரம் ஹோம்; ஆன்லைன் ரிவ்யூ..” விளம்பரத்தால் இளம்பெண்களிடம் ரூ.19 லட்சம் மோசடி
நெல்லை மாவட்டம், வள்ளியூரைச் சேர்ந்தவர் அபிநயா. இவர், கடந்த அக்டோபர் மாதம் இன்ஸ்டாகிராமில் வந்த “வீட்டிலிருந்த படியே வேலை” என்ற விளம்பரத்தைப் பார்த்து அதை க்ளிக் செய்துள்ளார். உடனே அவருக்கு வாட்ஸ் அப் மூலம் ஒரு தகவல் வந்துள்ளது. அதில், தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும், டெலிகிராம் செயலியில் இணையுமாறும் கூறப்பட்டுள்ளது. டெலிகிராமில் அவரைத் தொடர்புகொண்ட மோசடி கும்பல், கூகுள் மேப்பில் ஹோட்டல்களுக்கு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ கொடுப்பதுதான் வேலை எனக்கூறியுள்ளார். முதலில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்காக ரூ.10, ரூ.20, ரூ.40 என சிறிய தொகையை அபிநயாவின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர்.

பின்னர், ”ப்ரீபெய்ட் டாஸ்க்” எனக்கூறிக் கொண்டு, பார்ட் டைம் வேலைகளை முடித்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைவார்த்தை காட்டியுள்ளனர். இதை நம்பிய அபிநயா, அவர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கிக்கணக்குகளுக்கு பல தவணைகளாக பணம் அனுப்பியுள்ளனர். ஒரு கட்டத்தில், தான் கட்டிய பணத்தை அவர் எடுக்க முயன்றபோது ”உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிட்டது”, ”தவறான ஆப்ஷனை க்ளிக் செய்துள்ளீர்கள்”, ”அக்கவுண்ட் ஃப்ரிஷ் ஆகிவிட்டது” என பல காரணங்களைக் கூறி மீண்டும் மீண்டும் பணக் கட்டச் சொல்லியுள்ளனர்.
இவ்வாறு அபிநயா மொத்தம், ரூ.9,45,300 வரை பணம் செலுத்தி ஏமாந்துள்ளார். இதே போல, நெல்லை மாவட்டம், ராதாபுரம் அருகிலுள்ள இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த சகாய அஸ்வினி, என்பவரிடமும் மோசடி நடந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு வந்த குறுஞ்செய்தியில் வெளிநாட்டு துணி நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இணைப்பில் சென்றபோது படங்களைப் பார்த்து ரிவ்யூ செய்தால் பணம் கிடைக்கும் எனக்கூறியுள்ளனர். இதிலும் முதலில் ரூ.14,000 லாபம் போல் கொடுத்து நம்ப வைத்துள்ளனர்.

பின்னர், அடுத்தடுத்தகட்ட வேலைகளைப் பெற பணம் கட்ட வேண்டும் எனக்கூறியுள்ளனர். இதை நம்பிய சகாய அஸ்வினி, தனது நகையை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் அவர்கள் கூறிய பல்வேறு வங்கிக்கணக்குகளில் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய பிறகு ’தொகை போதவில்லை’, ‘ஆர்டர் போதவில்லை’ எனக்கூறி மொத்தம் ரூ.9,50,192 வரை பணம் பறித்துள்ளனர். கடைசியாக தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளனர். அப்புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

















