போலீஸ்காரரிடமே தங்க செயின், செல்போன் திருட்டு - வேலூர் புதிய பேருந்து நிலையத்தில...
'ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல்' ; 'இல்லை, திறந்து தான் இருக்கிறது' - குழப்பும் ஈரான், அமெரிக்கா
ஈரான் போரின் மையமாக மீண்டும் 'ஹார்முஸ் நீர்ச்சந்தி' மாறியுள்ளது.
ஹார்முஸ் இப்போது திறந்திருக்கிறதா... முடியிருக்கிறதா என்கிற கேள்வி, தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்தக் கேள்விக்கான பதிலை அமெரிக்கா, ஈரானும் வெவ்வேறு விதமாக கூறிக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதப் போர் நிறுத்தத்திற்குப் பிறகு, தற்போது மீண்டும் அமெரிக்காவும், ஈரானும் மாறி மாறித் தாக்குதல் நடத்திகொண்டிருக்கின்றன.
இதற்கு அமெரிக்கா சொல்லும் காரணம், 'இது தற்காப்புத் தாக்குதல்' என்பதாகும். ஈரானோ, 'அமெரிக்கா தாக்குகிறது... பதிலுக்கு நாங்கள் தாக்குகிறோம்' என்கிறார்கள்.

சரி... இப்போது ஹார்முஸ் நீர்ச்சந்தி பிரச்னைக்கு வருவோம். இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஈரான் கப்பற்படை வெளியிட்டுள்ள அறிக்கை...
"ஹார்முஸ் நீர்ச்சந்தி மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
அமெரிக்க எதிரிகளால் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்ந்து மீறப்பட்டதைத் தொடர்ந்து, ஹார்முஸ் நீர்ச்சந்தி மறுஅறிவிப்பு வரும் வரை மூடப்படுகிறது.
பெர்சிய வளைகுடா அல்லது ஓமன் வளைகுடாவில் நங்கூரமிட்டுள்ள எந்தவொரு கப்பலும் அங்கிருந்து நகரக் கூடாது என்று எச்சரிக்கிறோம்.
ஹார்முஸ் நீர்ச்சந்தியை நெருங்குவது எதிரிக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகக் கருதப்படும்.
இந்த உத்தரவை மீறி, ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாக சட்டவிரோதமாகக் கடக்க முயன்ற இரண்டு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது".
ஈரான் கப்பற்படை அறிக்கைக்கு அமெரிக்க ராணுவத்தின் ஒரு பிரிவான மத்திய கட்டளையகம் (CENTCOM) செய்துள்ள 'Fact Check' பதிவு இதோ...
"தகவல்: ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டுவிட்டதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உரிமை கொண்டாடுகிறது.
உண்மை: வணிகக் கப்பல்கள் இன்று இரவு கூட, ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகத் தடையின்றித் தொடர்ந்து சென்று கொண்டும், வந்து கொண்டும் இருக்கின்றன".
இரு தரப்பும் வேறு வேறு பதில்களை தந்து வருகின்றன. ஆனால், ஹார்முஸ் நீர்ச்சந்தியின் தற்போதைய நிலை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.















