சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்...
அகமதாபாத் விமான விபத்து: `உள்நோக்கத்துடன் சுவிட்ச்சை ஆஃப் செய்த விமானி?' - அதிர்ச்சி தகவலின் பின்னணி
அகமதாபாத்தில் 260 பேர் பலியான ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை என்றும் விமானியால் தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்றும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் இன்னும் இந்திய அரசு இந்த விஷயத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது.
அதில் பயணித்த பயணிகள், பணியாட்கள் உட்பட 260 பேர் அந்த விபத்தில் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் அப்போது ஒட்டுமொத்த நாட்டையுமே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இந்த விபத்து தொடர்பான விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்ஜினுக்கு எரிபொருள் செலுத்துவதற்கான சுவிட்ச்சை ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்றும் உள்நோக்கத்துடன் தான் விமானி இதனை செய்திருக்கிறார் என்றும் Corriere della Sera எனும் இத்தாலி செய்தித்தாள் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது. எனினும் அந்த ஊடகம் யாரிடம் பேசி இந்த தகவலை பெற்றது என குறிப்பிடவில்லை.
மேலும் இந்த செய்தியின்படி, விசாரணை அதிகாரிகள் கடந்த ஜூன் 2025 விபத்து, என்ஜினுக்கான எரிபொருள் துண்டிப்பு, இயந்திர கோளாறால் ஏற்படவில்லை, வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலால் நிகழ்ந்தது என்று தீர்மானித்துள்ளனர். அதிகாரிகள் இப்போது தங்கள் இறுதி அறிக்கையை தயாரித்து வருகிறார்கள். விசாரணையில் உதவும் அமெரிக்க நிபுணர்கள் இந்த கண்டுபிடிப்புகளை, விசாரணையில் ஒரு பெரிய முன்னேற்றம் என்று விவரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் இந்த விபத்துக்கு பைலட்டுகள் நேரடியாக காரணம் என இந்திய அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை.
அந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் உடன், உதவி விமானியான க்ளைவ் குந்தர் ஆகியோர் சேர்ந்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.

















