சேலம்: `10 வருஷமாகியும் குழந்தைக்கு பிறப்பு சான்று கிடைக்கல'- அலட்சிய அதிகாரிகள்...
`டிடிவி-க்கு சித்தியின் மீது குறையாத கோபம்' - சசிகலாவின் `திடீர்' ஆதரவாளர்கள் சந்திப்பு ஏன்?
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தன் இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து, 2026 தேர்தலில் களமிறங்குவது குறித்து தொடர்ச்சியாக ஆலோசனை நடத்தி வருகிறார். ஜெயலலிதா நினைவுநாளான பிப்ரவரி 24-ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என்றும் சொல்லப்படுகிறது.
மறுபுறம், சசிகலா ஆதரவாளர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இதன் பின்னணி என்ன?
2021 பிப்ரவரியில் சிறையிலிருந்து வெளியில் வந்த சசிகலா, தேர்தலுக்கு முன்பாக அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். ஆனால், சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதலாக, 'நான் விரைவில் களத்தில் இறங்குவேன், அதிமுகவைக் கைப்பற்றுவேன்'' என தொடர்ச்சியாகப் பேசிவந்தார். பலமுறை சுற்றுப்பயணம் சென்றும் பெரியளவில் ஆதரவு இல்லை.
இந்தநிலையில், கடந்த ஆறாம் தேதி தன்னுடைய இல்லத்தில் ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் த.வெ.கவுடன் கூட்டணி வைக்கலாம் என முன்னாள் கொறடா பள்ளிப்பட்டு நரசிம்மன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன் உள்ளிட்ட ஒருசிலர் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர்.
ஆனால், ''தொகுதியில் சென்று வேலை பாருங்கள். மற்ற விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்பதை மட்டும் சசிகலா சொல்லி அனுப்பியிருப்பதாக தகவல்கள் வெளியாகியன.
இந்தநிலையில் கடந்த இரண்டு நாள்களாக மீண்டும் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் சசிகலா. அவரின் இந்த புதிய அரசியல் பிரவேசத்தின் பின்னணி என்ன? விபரமரந்தவர்களிடம் பேசினோம்...
``2026 தேர்தலுக்குள் மீண்டும் எப்படியாவது அ.தி.மு.கவுக்குள் ஐக்கியமாகிட வேண்டும் என நினைத்தார் சசிகலா. செங்கோட்டையன் - ஓ.பி.எஸ் - டி.டி.வி தினகரனை வைத்து ஒரு ஆட்டம் ஆடலாம் எனவும் எதிர்பார்த்தார். ஆனால், செங்கோட்டையன், தவெகவில் இணைந்துவிட்டார். டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார்.
ஓ.பி.எஸ் எப்போது வேண்டுமானால் இணைவதற்கு தயாராக இருக்கிறார். அதனால், தனித்து விடப்பட்டுவிட்டடோம் என மீண்டும் உணர்ந்தவர், ஆதரவாளர்கள் கூட்டம் என எதோ நடத்திக்கொண்டிருக்கிறார்.
அந்தக் கூட்டத்தில் மூன்று, நான்கு பேரைத் தவிர அடையாளம் தெரிந்த நபர்கள் யாரும் இல்லை. திவாகரனின் அண்ணா திராவிடக் கழகத்தை புதுப்பித்து ஒரு டிமாண்டை உருவாக்கலாம் இல்லையென்றால் புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாம் எனவும் திட்டமிடுகிறார்.
தமிழகம் முழுவதும் ஐம்பது தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கவும் திட்டமிட்டு வருகிறார். ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அவ்வளவு எளிதாக அவரை விட்டுவிடாது. இன்னும் சில வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. அதேபோல, ஊழல் வழக்கில் சிறை சென்றதால் அவரை கூட்டணிக்குள்ளும் சேர்த்துக்கொள்ளாது. தேவைப்பட்டால், ஆதரவு கொடுத்து அறிக்கை விடச் சொல்வார்கள் அவ்வளவுதான் '' என்கிறார்கள்.
மறுபுறம், சசிகலாவின் ஆதரவாளர்களுக்கும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களுக்கும் இடையே சமூக வலைதளங்களில் கடுமையான கருத்து மோதல்கள் நிலவி வருகிறது. அதன் பின்னணி பற்றி விசாரித்தோம்...
``2021 தேர்தலில் சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளப் போவதாக அறிவித்த காலத்திலிருந்தே இருவருக்கு இடையிலும் கருத்து வேறுபாடுகள் ஆரம்பித்துவிட்டன. பொருளாதார ரீதியாக சசிகலா உதவி செய்யவில்லை என்கிற கோபம் தினகரனுக்கு இருந்தது. அ.தி.மு.கவில் சசிகலாவின் குடும்ப ஆதிக்கம் கைவிடுப்போனதற்கு தினகரன் அவசரப்பட்டு எடுத்த முடிவுகள்தான் காரணம் என சசிகலா நினைத்தார்.
சிறையில் இருக்கும்போது திவாகரன் மூலமாக பல தகவல்கள் அவரின் காதுகளுக்குப் போயிருக்கிறது. அதனாலேயே, திவாகரனுக்கும் தினகரனுக்கும் ஆகாது. 2021 தேர்தலுக்குப் பிறகு சில காலம் அமைதியாக கட்சிக்காரர்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருந்தார் தினகரன். சசிகலா கட்சிக்கொடி ஏற்றுவது, சுற்றுப்பயணம் எனத் தீவிரமாகக் களத்தில் இறங்க, மீண்டும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இப்போது எடப்பாடி பழனிசாமியைக் கூட மன்னித்துவிட்டார் தினகரன், ஆனால், சித்தியின் மீதான கோபம் அவருக்குக் குறையவே இல்லை. அதேபோல, தினகரன் கடைசியாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமாகிவிட்டார். துரோகம் செய்துவிட்டார் என தனது ஆதரவாளர்களிடம் சசிகலா கூறிவருகிறார்.
மறுபுறம், அம்மாவின் ஆட்சி மீண்டும் உருவாக ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்தநேரத்தில், தேர்தலில் போட்டி என வாக்குகளைப் பிரித்து திமுக வெற்றிக்கு உதவப்போகிறார் என தினகரனின் ஆதரவாளர்கள் சசிகலா துரோகம் செய்கிறார் என விமர்சித்து வருகின்றனர்'' என்கிறார்கள்.














