`ஸ்டாலின் இப்படிச் சொல்வது அவரின் உயரத்துக்கு அழகல்ல' - சிபிஐ வீரபாண்டியன் விமர்...
`அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி' - முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு போலீஸ் சம்மன்!
போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த புகார் தொடர்பான வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேரில் ஆஜராகக் கோரி சம்மன் அனுப்பியுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் சிவசங்கர். இவரிடம் தனது மகனுக்கு வேலை வாங்கித் தருமாறு, ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் சீனிவாசன் என்பவர் அணுகியதாகக் கூறப்படுகிறது.

அப்போது, மாநகரப் போக்குவரத்துக்கழகத்தில் உதவி பொறியாளர் பணி பெற்றுத் தருவதாகக் கூறி, தவணை முறையில் மொத்தம் 23 லட்சம் ரூபாய் கைமாறியுள்ளது. ஆனால், நீண்ட நாட்களாகியும் வாக்குறுதி அளித்தபடி வேலை வாங்கித் தரவில்லை. வாங்கிய பணத்தையும் திருப்பித் தரவில்லை என்று கூறப்படுகிறது.
பணத்தை இழந்து ஏமாற்றமடைந்த சீனிவாசன், சென்னை காவல் ஆணையரகத்தில் முறைப்படி புகார் அளித்தார்.
இப்புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த மோசடியில் சிவசங்கரின் உதவியாளர் இளஞ்செழியன் என்பவர் கடந்த 24-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட இளஞ்செழியனிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு இந்த வழக்கில் நேரடித் தொடர்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய போலீஸார் முற்பட்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சிவசங்கருக்கு அதிகாரப்பூர்வமாக சம்மன் அனுப்பியுள்ளனர்.
















