விசிக: `திருச்சி கிழக்கில் நான் போட்டியிடுகிறேனா..?' - திருமாவளவன் விளக்கம்!
காரில் வெடித்த நாட்டு வெடிகுண்டு; நூலிழையில் உயிர் தப்பிய காதலி; உடல் கருகி பலியான காதலன்!
கர்நாடக மாநிலம், தும்கூரு மாவட்டத்தில் கல்லம்பெல்லா பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென வெடித்து, தீ பற்றியது. காரிலிருந்த கார் ஓட்டுநரும், பெண்ணும் உயிர் தப்பிய நிலையில், ஒருவர் உடல் கருகி பலியானார். இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்த காவல்துறை, விசாரணையைத் தொடங்கியது.
அப்போது, காவல்துறை தரப்பிலிருந்து வெளியான தகவல்கள், மிகுந்த அதிர்ச்சிகரமாக இருந்தன.
கார்வர் மாவட்டத்தின் அங்கோலாவைச் சேர்ந்தவர் நாகேந்திரா (30). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெங்களூருவில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் ஆய்வகத் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றி வந்த ரம்யா என்றப் பெண்ணும் சுமார் 8 ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கின்றனர். இதற்கிடையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ரம்யா திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது.

இந்த நிலையில், வாடகை காரை புக் செய்த நாகேந்திரா, பெங்களூரில் இருக்கும் ரம்யாவைச் சந்தித்து, அவரிடம் பேச வேண்டும் எனக் கூறி கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை நேரில் கண்ட ரம்யாவின் தோழி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதற்கிடையில், காரில் சென்ற இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது நாகேந்திரா ரம்யாவை தலையில் பலமாக அடித்திருக்கிறார். இதனால் பதற்றமடைந்த ரம்யா காரிலிருந்து குதிக்க முயன்றிருக்கிறார். இது தொடர்பாக கார் ஓட்டுநர் பிரவீன் கொடுத்த வாக்குமூலத்தின்படி, `நாகேந்திரா பெயரில் கார் ஊபரில் புக் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் காரில் ஏறும்வரை சாதாரணமாகவே பயணம் இருந்தது. அந்தப் பெண் காருக்குள் வந்ததும், வாக்குவாதம் நடந்தது. அந்தப் பெண்ணை நாகேந்திரா கத்தியால் தாக்க முயன்றார். உடனே காரை நிறுத்தி, அந்தப் பெண்ணை ஒருவரின் இருசக்கர வாகனத்தில் அனுப்பி வைத்தேன்.
நான் மீண்டும் கார் அருகில் வந்தபோது, நாட்டு வெடிகுண்டை கையில் வைத்திருந்தார் நாகேந்திரா, அதைப் பிடுங்கி வீசினேன். அப்போதுதான் அவர் கையில் வைத்திருந்த இன்னொரு குண்டை வெடிக்கச் செய்தார்' எனக் குறிப்பிட்டிருக்கிறார். ``ரம்யாவின் வாக்குமூலத்துக்கும், ஓட்டுநரின் வாக்கு மூலத்துக்கும் சில வேறுபாடுகள் இருக்கின்றன. அது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும், நாகேந்திரவுக்கு நாட்டு வெடிகுண்டு எப்படி கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்." எனத் தெரிவித்திருக்கிறது, காவல்துறை. இன்னும் காவல்துறை தரப்பிலிருந்து முழுமையான அறிக்கை வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.
















