ஆனந்தம் 25: 'கோபப்பட்ட சௌத்ரி சார்; என் வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த நாள்!' - நெகிழும் லிங்குசாமி
இயக்குநரும் கவிஞருமான லிங்குசாமி, இயக்குநராக அறிமுகமான 'ஆனந்தம்' படம் வெளியாகி இன்றோடு 25 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 2001ம் ஆண்டின் மே மாதம் 25ம் தேதி அன்று 'ஆனந்தம்' வெளியானது.
சூப்பர் குட் ஆர்.பி.சௌத்ரியின் தயாரிப்பில் மம்மூட்டி, முரளி, அப்பாஸ், ரம்பா, தேவயானி, சினேகா எனப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தோடு அழகான குடும்பக் கதையாக 'ஆனந்தம்' வெளியாகி இருந்தது.

தமிழ் சினிமாவில் கூட்டுக் குடும்பக் கதைகளில் தனி இடத்தைப் பிடிக்கும் படங்களில் 'ஆனந்தம்' உண்டு. இந்தப் படத்தின் மூலம் அறிமுகமான லிங்குசாமி நம்மையும் அந்தக் கூட்டுக்குடும்பத்தில் ஒருவரான உணரவைத்திருப்பார்.
`திருப்பதி குடும்பம்' என்று ஊரே மரியாதையோடு அழைக்கும் ஒரு கூட்டுக் குடும்பத்தின் சுகதுக்கங்களில் படம் பார்ப்பவர்களையும் பங்குபெறச் செய்திருந்தார். மொத்த படத்தையும் மம்மூட்டி தன் தோளில் தூக்கிச் சுமந்திருப்பார்.
``மக்கள் ரெண்டு பேர்கிட்டதான் தராசு கொடுத்திருக்காங்க. ஒருத்தர் நீதிபதி, மற்றொருத்தர் நம்மளைப்போல வியாபாரி" என்ற பிருந்தா சாரதியின் மின்னல் தெறிக்கும் வசனங்களும் பலம் சேர்த்தன.

இன்று 25 ஆண்டைக் கொண்டாடும் 'ஆனந்தம்' குறித்து லிங்குசாமியிடம் பேசினோம். ``தமிழ் சினிமாவுக்கு 43 கலைஞர்களை அறிமுகப்படுத்தின ஆர்.பி.சௌத்ரி என்கிற மகா கலைஞன்தான் என்னையும் அறிமுகம் செய்து வைத்தார்.
என்னுடைய வாழ்க்கையில் எனக்கு கிடைத்த புகழ், சந்தோஷம், வாழும் வாழ்க்கை, என்னோட சாப்பாடு எல்லாத்தையும் அந்த மகா குருவுக்குத்தான் அர்ப்பணிக்கறேன். அவர்கிட்ட கதை சொல்லப்போன சந்திப்பில் இருந்து அதன் பிறகு அவருக்கும் எனக்குமான எல்லா நினைவுகளையும் பொக்கிஷமாக ஞாபகம் வச்சுக்குவேன்.

'ஆனந்தம்' கதையைச் சொல்லி முடிச்சதும் அவர் என்கிட்ட 'இந்தக் கதையை எத்தனை நாள்கள்ல எடுப்பீங்க?'னு கேட்டார். நான் புதுசுங்கறதால ஷூட்டிங் நாள்கள் எனக்கு சரியான கணிக்க தெரியாமல் 60 நாட்கள்ல முடிச்சிடுவேன் சார்னு சொன்னேன். ஏன்னா, அப்ப ஃபிலிம்லதான் ஷூட் செய்வாங்க. ஆனா, குறிப்பிட்ட நாள்களைத் தாண்டியும் படப்பிடிப்பு முடியல. இன்னும் பல நாள்கள் ஷூட்டிங் நடந்த வேண்டியிருந்தது.
60 நாள்களுக்குள் படத்தை நான் முடிக்காததால் சௌத்ரி சார் கோபமாகிட்டார். 'இந்தப் படத்தை மேற்கொண்டு என்னால எடுக்க முடியாது. நீங்க வேற யாரையாவது வச்சு எடுத்து முடிச்சுக்குங்க'னு கோபமாகச் சொல்லிட்டார். என் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே அவர் கத்திட்டார்.
என்னோட பக்கம் உள்ள நியாயத்தைக் கேளுங்க. என் சைடுல என்ன நடந்ததுனு சொல்றேன் சார்னு அவர்கிட்ட கேட்பேன். ஆனா அவர் கண்டுக்காமல் போயிடுவார். 'தங்க ஊசியாக இருந்தாலும் கண்ணுல குத்திக்க முடியாதுப்பா'னு நீங்க எதுவும் சொல்ல வேணாம்னு கடுமையாகச் சொன்னார்.

ஒருநாள் நான் அவரைச் சந்திக்க ஆபீஸுக்குப் போயிட்டேன். இந்தப் படத்தை நீங்க யாரை வச்சு வேணும்னாலும் டைரக்ட் பண்ணிக்குங்க. ஆனா, என் தரப்பில் சொல்றதுக்குக் காரணம் இருக்கு. அதை நீங்க கேளுங்கனு சொன்னதும் தான் 'சரி சொல்லுங்க.. 'ன்னார். அதன் பிறகு என் தரப்பில் நடந்ததைச் சொன்னேன்.
படத்தில் நடிகர்கள் காம்பினேஷன் அதிகம். ஒவ்வொருத்தரையும் ஒண்ணு சேர்க்கறதுக்கு டைம் எடுக்குது. மழையினால் சில நாள்கள் பாதிப்பானது. முதல் படம் எடுக்கும்போது நான் எவ்வளவு ஆர்வமாக இருப்பேன். மொத்த உழைப்பையும் விரும்பி கொடுக்கணும்தான் முயற்சிப்பேன்.

என் படம் என்னால தள்ளிப்போகுமா.. இப்படி பல காரணங்கள் இருக்கு சார். நான் 60 நாள்கள்ல எடுத்து முடிச்சிடலாம்னு சொன்னால், நீங்க எப்படி அதை நம்பலாம். நிஜமான காரணங்கள் இதுதான். படம் ரொம்ப நல்லா வந்திருக்குது. நம்புங்க சார். நீங்க இதை என்னை வச்சு எடுக்க விரும்பலைனா, இந்தக் கதையை நான் தொடவே மாட்டேன்'னு எமோஷனலாகச் சொன்னதும், நெகிழ்ந்துட்டு என்னைச் சமாதானப்படுத்தினார்.
'இன்னும் எத்தனை நாட்கள் ஆகும்?'னு கேட்டார். அந்த ஒரு நாளை என் வாழ்க்கையில் முக்கியமான நாளாகக் கருதுறேன். நம்முடைய வாழ்க்கையில் எவ்வளவோ தவறுகள், சரிகள் நடக்கலாம். ஆனா, முழு மனசோடு போய் ஒருத்தரை நேர்ல சந்திச்சு அதன் காரணங்களைச் சொல்லும் போது பிரச்னைகள் பஞ்சா பறந்துடும். உண்மை என் பக்கம் இருக்கும்போது யார்கிட்ட வேணா நான் நேரிடையாகப் போய் பேசிடுவேன். இதுவரைக்கும் நான் அப்படித்தான் இருந்திருக்கேன்'' நெகிழ்கிறார் லிங்குசாமி.



















