'10 வயதில் சதம்' - அண்ணன் வைபவ் வழியில் மிரட்ட வரும் அடுத்த சூறாவளி ஆசீர்வாத் சூ...
``ஈழப் பிரச்னை பத்தி நான் ஒரு படம் பண்ணனும்னு பிரபாகரன் ஆசைப்பட்டாரு" - 'தடம்' பேட்டியில் பாரதிராஜா
2008-ம் ஆண்டு விகடனின் 'தடம்' இதழில் இயக்குநர் பாரதிராஜாவின் பேட்டி இடம்பெற்றிருந்தது.
அந்தப் பேட்டியில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தது குறித்து, "எவ்வளவு பெரிய தலைவன் பிரபாகரன். ஈழம் சென்றபோது, எல்லா இயக்கக் கட்டுப்பாடுகளையும் தளர்த்திக்கொண்டு என்னை கட்டியணைத்துக் கொண்டார்.
தமிழ்ச்செல்வன்தான் என்னை அழைத்துச் சென்றார். பிரபாகரன், தமிழ்ச்செல்வன், பொட்டு அம்மான், சூசை நால்வருடனும் ஒரே நேரத்தில் அமர்ந்து பேசுவது என்பது மிகப் பெரிய விஷயம்.
அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது" என்று பகிர்ந்த பாரதிராஜா, பிரபாகரனுக்கு தன் மீதிருந்த அன்பு குறித்து...

" ‘மண்வாசனை’ படம் வெளியானபோது மதுரையில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருந்தேன். அப்போதே உங்களைச் சந்திக்க முயற்சித்தேன். பின்னொரு முறை வீரமணி அண்ணனிடம் சொல்லி சந்திக்க முயற்சித்தேன்.
முடியாமல் போய்விட்டது. நான் உங்கள் ரசிகன். நீங்கள் வருகிறீர்கள் என்றதும் உங்களிடம் பேசுவதற்காக ‘கண்களால் கைது செய்’ படம் வரை அத்தனைப் படங்களையும் போட்டுப் பார்த்தேன்’ என்றார் பிரபாகரன்" என்று கூறியிருக்கிறார்.
"அது அமைதிக்காலம். திருமாவளவனும் அப்போது அங்குதான் இருக்கிறார் என்று சொன்னார்கள். ரெண்டு நாள் இளைஞர்களுக்கு நான் சினிமா குறித்து வகுப்பெடுத்தேன். ‘எங்கள் பிள்ளைகளுக்கு முழுமையான வகுப்பெடுக்க வேணும்’னார்.
நான், ‘எங்கெங்கோ ஷூட்டிங்கில இருப்பேன்’னேன். ‘நீங்கள் இடத்தைச் சொல்லுங்கள். விசா இல்லாமல் எங்கள் பிள்ளைகள் அங்கு வந்து சேர்ந்துவிடுவார்கள்’ என்றார். ‘நான் ஒரு சராசரி மனிதன். எனக்கு சில குடும்பக் கடமைகள் இருக்கு.
அதை முடிச்சுட்டு கண்டிப்பா வர்றேன். இங்கேயே வந்து தங்கி இருந்து வகுப்பெடுக்கிறேன். படமும் எடுக்கிறேன்’னேன்" என்று விவரித்தவர், பிரபாகரனுடனான சந்திப்பு குறித்து தொடர்கிறார்...

"எனக்கு அப்போது அந்தத் தீவிர உணர்வு இருந்தது. என்னென்னமோ நடந்து முடிந்துவிட்டது. காலங்கள் ஓடிவிட்டன. எவ்வளவு பெரிய வீரர்கள் அந்த இளைஞர்கள். பெண் புலிகளைப் பார்த்து வியந்துபோயிருக்கிறேன். அவர்களைப்போல் போராளிகளைப் பார்ப்பது அரிது.
இங்கிருந்துகொண்டு, நாம் தமிழ் இனம், தமிழ்மொழி என்று பேசுகிறோம். ஆனால், இனம், மொழி, நிலம், குறித்துப் பேச கூடுதல் உரிமை கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள்தான்.
ஈழப்பிரச்னை குறித்து படம் ஒன்றை இயக்கித் தரச் சொல்லி பிரபாகரன் கேட்டிருந்தார். உண்மையில், பிரபாகரனின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் போனது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது" என்று முடித்தார்.




















