அஸ்ஸாம்: விமானப்படை விமானம் விழுந்து 5 வீரர்கள் பலி; முதல்வர் ஹிமந்தா சொல்வது என...
Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; என்ன நடைமுறை இது?
சில நேரங்களில் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றால், 'இது எங்கள் எல்லைக்குள் வராது' என்று சொல்வதைக் கேட்டிருப்போம். இந்த வசனத்தை திரைப்படங்களில்கூட கேட்டிருப்போம்.
சாதாரண மக்களுக்கு எங்கே நடந்த குற்றம் எந்த எல்லைக்குள் வரும் என்பது தெரியாது. நம் பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்திற்கோ, தெரிந்த காவல் நிலையத்திற்கோ சென்றுதான் புகார் கொடுப்போம்.
அந்த நேரத்தில், 'இது எங்கள் எல்லைக்குள் வராது' என்பது சரிபட்டு வராது. இந்தப் பிரச்னையைச் சரிசெய்யவே, 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்'.

ஜீரோ எஃப்.ஐ.ஆர் என்றால் என்ன?
எஃப்.ஐ.ஆர் என்பது ஒரு குற்றச்சம்பவம் தொடர்பாக போலீசில் பதிவு செய்யப்படும் முதல் புகார்.
பொதுவாக எந்த இடத்தில் குற்றம் நடந்ததோ, அந்தப் பகுதியின் காவல் நிலையத்தில்தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
ஆனால், எல்லா நேரத்திலும் மக்களால் குற்றம் நடந்த இடத்திற்கே சென்று புகார் அளிக்க முடியாது. குறிப்பாக பயணத்தில் இருக்கும்போது, பெண்கள் மீதான வன்முறை, குழந்தைகள் காணாமல் போவது மாதிரி அவசர சூழ்நிலைகளில் இது பெரிய பிரச்னையாக மாறுகிறது.
அதற்காகத்தான் 'ஜீரோ எஃப் ஐ ஆர் முறை கொண்டு வரப்பட்டது.
இந்த முறையின் கீழ், குற்றம் எங்கு நடந்திருந்தாலும் எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.
'இது எங்கள் எல்லை இல்லை' என்று சொல்லி போலீசார் புகாரை மறுக்க முடியாது.
அவர்கள் அந்தப் புகாரை '0' என்ற எண்ணில் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பிறகு, அந்த வழக்கு சம்பவம் நடந்த பகுதியின் காவல் நிலையத்துக்கு மாற்றப்படும்.
ஏன் இது முக்கியம்?
ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானாலும், குழந்தை காணாமல் போனாலும், ஒருவர் கடத்தப்பட்டாலும் அந்த நேரத்தில் ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.
அந்தச் சூழ்நிலையில் காவல் நிலையம் தேடி அலைவது பாதிக்கப்பட்டவர்களின் நேரத்தையும் மனநிலையையும் மேலும் பாதிக்கும்.
அதனால்தான் இந்த 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' எல்லாருக்கும் தெரிஞ்சிருக்க வேண்டிய ஒரு முக்கியமான உரிமை.

ஒரு எளிய உதாரணம்...
நீங்கள் ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அந்த நேரத்தில் உங்கள் கைபேசி காணாமல் போய்விட்டது என்றால், அது எந்த இடத்தில் தொலைந்தது என்பதைக் கண்டுபிடித்து அந்தப் பகுதி காவல் நிலையத்துக்கே போக வேண்டும் என்ற அவசியம் இல்லை.
நீங்கள் தற்போது இருக்கும் இடத்தில் உள்ள காவல் நிலையத்திலேயே புகார் அளிக்கலாம். அவர்கள் அதை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல் பெண்களுக்கு எதிரான வன்முறை, பாலியல் தொந்தரவு, குழந்தைகள் காணாமல் போவது போன்ற எந்த அவசர சூழ்நிலையிலும் அருகிலுள்ள எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.
2012-ம் ஆண்டு டெல்லியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்குப் பிறகு, இந்தியாவில் இந்த ஜீரோ எஃப்.ஐ.ஆர் நடைமுறையை அதிகமாக வலியுறுத்த ஆரம்பித்தனர்.
ஆனாலும் இன்னும் பலருக்கு இதைப் பற்றிய விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை.



















