Zero FIR: குற்றம் நடந்தது ஓர் இடத்தில் என்றாலும், வேறு இடத்தில் புகாரளிக்கலாம்; ...
Jayaram: "அப்போ நான் அவர்கிட்ட போய் மன்னிப்புக் கேட்டேன்'' - தன் காதல் கதையைப் பகிர்ந்த ஜெயராம்
நடிகர் ஜெயராம் நடிப்பில் கடந்த வாரம் 'பரிமளா & கோ' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.
அப்படத்திற்காக நம் சினிமா விகடன் சேனல் நடத்திய பிரத்யேக 'விகடன் பிரஸ் மீட்' நிகழ்வில் ஜெயராம் கலந்துகொண்டு பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

அப்படி அந்த உரையாடலில் அவருடைய மனைவி பார்வதி உடனான காதல் கதை பற்றியும், அதனால் ஏற்பட்ட ஒரு சம்பவத்தைப் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.
நடிகர் ஜெயராம், "என்னுடைய மனைவியும், மறைந்த நடிகர் ஸ்ரீனிவாசனும் சேர்ந்து நடித்த படத்தை நான் அடிக்கடி பார்ப்பேன். அந்தப் படத்தின் பெயர் 'வடக்கு நோக்கி யந்திரம்'. 'பஞ்சதந்திரம்' போல அந்தப் படமும் நல்ல நகைச்சுவை அம்சங்களோடு இருக்கும்.
சோர்வடையும் சமயங்களில் அந்தப் படத்தை நான் போட்டுப் பார்ப்பேன். அந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளங்களுக்கு நான் யாருக்கும் தெரியாமல் போய் என் மனைவியைச் சந்திப்பேன்.
அப்போ நாங்க காதலிச்சுட்டு இருந்த சமயம். ஸ்ரீனிவாசன்கிட்ட மட்டும் சொல்லிட்டு படப்பிடிப்புத் தளத்துக்கு வருவேன். நாங்க காதலிச்சுட்டு இருந்த நேரத்துல இந்த மாதிரி நாங்க வெளியே போனதுனால ஒருநாள் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருக்கு.

இதை நான் எங்கேயும் சொன்னதில்லை" எனத் தொடர்ந்தவர், "எனக்கு படப்பிடிப்பு நடந்த பகுதியின் அருகில் என் மனைவி நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங்கும் நடந்துட்டு இருந்தது.
மாலை லைட் போவதற்குள் என் மனைவி நடித்த படத்தின் ஒரு பாடல் ஷூட் பண்ணியாக வேண்டும். அப்போ மொபைல் கிடையாது. என்னுடைய கார் ஹார்ன் சத்தம் என் மனைவிக்குத் தெரியும்.
அன்னைக்கு நான் ஹார்ன் அடிச்சதும் ஷூட்டிங்ல 'டச் அப் பண்ணிட்டு வந்துறேன்'னு பொய் சொல்லிட்டு என்கூட வந்துட்டாங்க. அன்னைக்கு முடிக்க வேண்டிய ஷூட்டிங் நின்றுவிட்டது. அந்தப் படத்தின் இயக்குநரும் கோபமாகித் திட்டிவிட்டார். பிறகு நான் போய் அவர்கிட்ட மன்னிப்பு கேட்டேன்" எனப் பகிர்ந்திருக்கிறார்.



















