பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதி...
Nooru Saami: "'உன்னை பார்க்கும்போது ரவுடி மாதிரி தெரிஞ்ச'னு சசி சார் சொன்னார்!" - பா. ரஞ்சித்
இயக்குநர் சசி இயக்கியிருக்கும் 'நூறு சாமி' திரைப்படம் ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷான் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நேற்றைய தினம் சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் உட்பட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு திரைப்படம் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பா. ரஞ்சித் பேசுகையில், "எனக்கு 'நூறு சாமி' திரைப்படம் மிகவும் பிடித்திருந்தது. அதோடு இயக்குநர் சசி சாரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் உதவி இயக்குநராக முயற்சி செய்து கொண்டிருந்த காலத்தில், முதன்முறையாக ஒரு இயக்குநர் தன் அறைக்குள் அழைத்து என்னை அமர வைத்து, பேசி அனுப்பி வைத்தது சசி சார்தான்.
அப்போது நான் கவின்கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் சசி சார் திடீரென்று எங்கள் கல்லூரிக்கு வந்திருந்தார். அப்போது நான் கல்லூரியில் கொஞ்சம் திமிருடன் சுற்றித் திரிந்த ஒரு மாணவன்.
சசி சார் வந்தபோது, நான் அவரை நேராகப் பிரின்சிபல் அறைக்கு அழைத்துச் சென்று அமர வைத்தேன். அவரிடம், 'சசி சார் எனக்குத் தெரிந்தவர். இவருக்கு நீங்கள் சீட் கொடுத்தே ஆக வேண்டும்' என்று பேசினேன்.
அதன் பிறகு, சசி சாரிடம் உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்கலாம் என்று முடிவு செய்து, 'உங்களைச் சந்திக்க வேண்டும்' எனக் கேட்டேன். அவரும் என்னை அவருடைய அலுவலகத்திற்கு வரச் சொன்னார்.
அவரைச் சந்தித்தபோது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். ஆனால், எனக்கு அந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை. 'நீ போட்டிருக்கும் இந்த டீஷர்ட்டின் நிறம் என்ன?' என்று கேட்டார்.
நான் ஒரு ஆர்ட்டிஸ்ட், ஃபைன் ஆர்ட்ஸ் படித்தவன். ஆனாலும், அந்த நிறத்தின் பெயர் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை. சிறிது நேரம் கழித்து நான் மீண்டும் அறைக்குள் சென்றேன். சென்ற உடனே, 'இது ஒரு வகையான பச்சை நிறம்' என்றேன்.
அதை உடனே கேட்ட சசி சார், 'சரி' என்று கூறிவிட்டு, 'உன்னைப் பார்த்ததும் முதலில் ஒரு ரவுடி போல தெரிந்தது. அதன் பிறகு நான் ஒரு கேள்வி கேட்டேன், அதற்கு உனக்கு விடை தெரியவில்லை என்றாலும், அதைத் தேடிக் கண்டுபிடித்து வந்து கூறிவிட்டாய்.
உன்னிடம் ஒரு நல்ல குணம் இருக்கிறது, நீ முயற்சி செய். ஆனால், இப்போது என்னிடம் நீ சேர முடியாது' என்று கூறி, என்னை வேறொரு இயக்குநரிடம் அனுப்பி வைத்தார்.

ஆனால், அவர் அனுப்பி வைத்த அந்த மற்றோர் இயக்குநரிடமும் நான் உதவி இயக்குநராகச் சேரவில்லை. முதன்முறையாக ஒரு இயக்குநரைச் சந்தித்து, அவர் என்னை மிகவும் பாசிட்டிவாக அனுப்பினார்." என்றவர் 'நூறு சாமி' படம் குறித்து, "நான் மிகவும் எமோஷனலான ஒரு மனிதன்.
இந்த 'நூறு சாமி' திரைப்படத்தைப் பார்க்கும்போது பல இடங்கள் என்னோடு பெரிதும் கனெக்ட் ஆனது. அதில் நடிகை ஸ்வாசிகா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். இதற்கு முன்பு சசி சாரை 'பூ சசி' என்று அழைத்தார்கள். இப்போது 'நூறு சாமி சசி' என்று அழைப்பதற்கான அத்தனை வாய்ப்புகளும் இருக்கின்றன." என்றார்.


















