சசிகலா: ''இனி பொறுமையாக இருக்க முடியாது!" - புதிய கட்சி தொடங்கிய சசிகலா!
ஊட்டி: பழங்குடியைக் கொன்று தின்ற புலி, ஆவேசத்தில் வனத்துறைக்கு எதிராக சாலையில் இறங்கிய மக்கள்!
நீலகிரி மாவட்டம், ஊட்டி, ஷூட்டிங் மட்டம் அருகில் உள்ள சின்ன காடிமந்து பகுதியைச் சேர்ந்தவர் தோடர் பழங்குடி புஸ்தாள் குட்டன். 55 வயதான இவர் மலை காய்கறி தோட்டங்களில் வேலை செய்து வந்திருக்கிறார். வழக்கம் போல் நேற்று மாலை தோட்ட வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பிய புஸ்தாள், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பதற்றமடைந்த அவரின் குடும்பத்தினர் பல இடங்களிலும் புஸ்தாள் குட்டனை தேடி அலைந்திருக்கிறார்கள். அருகில் உள்ள வனப்பகுதியில் புஸ்தாள் குட்டனின் உடல் சிதைந்து கோரமான நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள். அதுமட்டுமன்றி, புஸ்தாள் குட்டனின் உடல் பாகங்களை புலி தின்று சென்றிருப்பதையும் உள்ளூர் பழங்குடி மக்கள் உறுதி செய்து அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள்.
தங்கள் கிராமத்திற்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காத வனத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளின் அலட்சியம் காரணமாகவே புஸ்தாள் குட்டனை புலி தாக்கி உட்கொண்டதாகக் கூறி ஆவேசமடைந்த தோடர் பழங்குடியின மக்கள், ஊட்டி - கூடலூர் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசுத்துறை அதிகாரிகள் நீண்ட நேரமாக பேச்சுவார்த்தை நடத்தி மக்களை சமாதானம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்னர். புஸ்தாள் குட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர், அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர். ஷூட்டிங் மட்டம் பகுதியில் இரவு நேரங்களில் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.


















