விருதுநகர்: பள்ளி வளாகம், கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவர்கள்; ஆசிரியைக்கு வலு...
கம்யூனிஸ்டுகளின் 'இரட்டை இலக்கு' கனவும் ஸ்டாலினின் 'கறார்' முடிவும்! - எப்போ முடியும் பங்கீடு?
தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
கதர் சட்டைகளுடன் இழுபறி ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில், தற்போது இடதுசாரி கட்சிகளுடன் திமுக-வுக்கு சிறு சிறு அதிருப்திகள் வர தொடங்கியுள்ளது.

இடதுசாரி கட்சிகளுடன் உரசல்
நேற்று அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நடைபெற்ற இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை, எதிர்பார்த்தபடி சுமுகமாக முடிவடையவில்லை.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், தனது அதிருப்தியை வெளிப்படையாகவே பதிவு செய்தார்.
விரக்தி!
"திமுக தரப்பில் முன்வைக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை எங்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை. கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை நாங்கள் கோரியுள்ளோம்.
இது குறித்து தலைமையுடன் ஆலோசித்துவிட்டு மீண்டும் அழைப்பதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது" என அவர் விரக்தியுடன் தெரிவித்தார்.
இரண்டு சிட்டிங்கில் முடியாத பேச்சுவார்த்தை
பொதுவாக, இரண்டு கட்ட பேச்சுவார்த்தைக்குள்ளேயே கூட்டணி கட்சிகளுடன் எண்ணிக்கையை இறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதே திமுகவின் திட்டம்.
காங்கிரஸூடன் அத்தனை புகைச்சல் நிலவிய போதும் இரண்டே சிட்டிங்கில் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட வைத்துவிட்டது திமுக.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் குழுவினர் மூன்று கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உடன்படவில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாவது சிட்டிங்கை முடித்துவிட்டு வெளிப்படையாக அதிருப்தியை காட்டிவிட்டது.
ஸ்டாலின் கறார்!
கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் வழங்கப்பட்டன.
இந்த முறை இருகட்சிகளும் இரட்டை இலக்கத்தில் எதிர்பார்த்தன. ஆனால் தற்போதைய சூழலில் தலா 5 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்க முடியாது என்பதில் முதல்வர் ஸ்டாலின் கறாராக இருப்பதாகத் தெரிகிறது.

உரிய இடங்களை ஒதுக்க ஏன் தயங்குகிறார்?
2016 தேர்தலில் திமுக தோல்வியடைந்தபோது, திமுக தோற்றதை விட, ஒரு கம்யூனிஸ்ட் கூட சட்டமன்றத்தில் இல்லையே என்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வருத்தப்பட்டதாக ஒரு செய்தி உண்டு. அந்த அளவிற்கு இடதுசாரிகள் மீது அவர் மதிப்புக் கொண்டிருந்தார்.
தற்போது முதல்வர் ஸ்டாலினும், இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, 'கொள்கை கூட்டணி' என்று மேடைதோறும் முழங்குகிறார்.
அப்படியிருக்கையில் தேமுதிக போன்ற இறுதிக்கட்டத்தில் இணைந்த கட்சிகளுக்கு ராஜ்ய சபா வரை கொடுத்துவிட்டு, கொள்கை பலம் கொண்ட இடதுசாரிகளுக்கு உரிய இடங்களை ஒதுக்க ஏன் தயங்குகிறார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாமிடம் பேசினோம், "பொதுவாக தொகுதி பங்கிட்டுக்கு கட்சிகள் போகும் போது எண்ணிக்கை பிரச்சனை கண்டிப்பாக வரும். காரணம் கட்சிகளின் அரசியல் ஆசைகள் அப்படி.
ஆனால் ஒட்டுமொத்த கூட்டணி என்கிற கணக்கில் தான் எண்ணிக்கை முடிவாகும். காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்ட தொகுதிகள் 3 அதிகம் என்பதால் திமுக கூட்டணி கட்சிகள் கூடுதலாக எதிர்பார்க்கின்றன.

அமில சோதனை
அதற்கான வாய்ப்பு இல்லை. காரணம் உதயசூரியன் சின்னம் 170க்கும் மேற்பட்ட இடங்களில் நின்றே ஆக வேண்டும். எனவே தேர்தல் அறிவிப்பாணைக்கு முன்பு எண்ணிக்கை முடிவாகிவிடும். அதற்குப் பிறகுதான் உண்மையான அமில சோதனை இருக்கிறது.
என்னென்ன தொகுதிகள் என்று அடையாளம் காண்பது. எது எப்படி இருந்தாலும் திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வெளியே போக வாய்ப்பு இல்லை. ஏனென்றால் அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா உள்ளது. விஜய் கூட்டணியில் வெற்றி உறுதி இல்லை" என்றார்.














