சிவகாசி: பிரசவத்தின்போது ஏட்டுவின் மனைவி சிசுவுடன் உயிரிழப்பு; போராட்டம் நடத்திய...
காட்டில் கறிவிருந்துடன் பிறந்தநாள் கொண்டாட்டம்; ரௌடிகளை ட்ரோன் மூலம் வளைத்துக் கைதுசெய்த போலீஸ்!
குற்றங்களை முன்கூட்டியே தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான தீவிர சோதனை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு எதிரான சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் தேடப்பட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகளான நங்கூரன்பிலாவிளையைச் சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் லிங்க ராஜா என்ற காட்டு ராஜா மற்றும் பனக்கோட்டான்விளை சுயம்புலிங்கம் என்பவரது மகன் வசந்த் ஆகியோர் காட்டுக்குள் கறி விருந்தில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதை அடுத்து காட்டுக்குள் ட்ரோன் மூலம் தேடுதல் வேட்டை நடத்தியது போலீஸ். அதில், சரித்திர பதிவேடு ரௌடிகள் உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் கறிவிருந்தில் ஈடுபடுவது தெரியவந்தது. மேலும், அவர்களின் கார்கள், பைக்குகள் ஆகியவையும் அங்கு நிறுத்தி வைத்திருந்தது தெரியவந்தது. ட்ரோன் மூலம் அவர்கள் இருப்பிடத்தை கண்டறிந்த போலீஸார் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் இருவர் மற்றும் அவர்கள் நண்பர்கள் 51 பேரையும் சுற்றிவளைத்தனர். அவர்கள் பயன்படுத்திய 15 பைக்குகள் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ரௌடி ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு காட்டுக்குள் கறிவிருந்து நடத்தியது தெரியவந்துள்ளது. சரித்திர பதிவேடு குற்றவாளிகளான லிங்க ராஜா மற்றும் வசந்த் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கும் கறி விருந்தில் கலந்துகொண்ட அவர்களது நண்பர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்தும், அவர்கள் குற்ற சம்பவங்களில் தொடர்பு உடையவர்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.





















