திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் கொலை; தாய், ஆண் நண்பருக...
சிவகாசி: பிரசவத்தின்போது ஏட்டுவின் மனைவி சிசுவுடன் உயிரிழப்பு; போராட்டம் நடத்திய உறவினர்கள் கைது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த டாஸ்மார்க் ஊழியர் பாக்கியராஜ் ஆனந்தவள்ளி தம்பதியரின் மகள் ரேணுகா தேவி. இவரது கணவர் தினேஷ், தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருகிறார்.
தினேஷ் - ரேணுகாதேவி தம்பதிகள் இருவரும் தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகிலுள்ள சங்குப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் நிலையில், இவர்களுக்கு ரித்திஷா என்ற 3 வயதுப் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் இரண்டாவது குழந்தைக்கு கர்ப்பம் தரித்த ரேணுகாதேவி, திருத்தங்கல்லில் தனது தாய் - தந்தை வீட்டில் தங்கியிருந்து சிவகாசியிலிருந்து விஸ்வநத்தம் செல்லும் சாலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ரேணுகாதேவி பிரசவத்திற்காக தான் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிரசவிக்க ரேணுகாதேவியை மருத்துவர்கள் அழைத்துச் சென்ற போது திடீரென உடல் நலம் பாதித்து சிசுவுடன் ரேணுகா தேவியின் உயிர் பிரிந்தது.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரேணுகா தேவியின் குடும்பத்தாரும், உறவினர்களும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் தனியார் மருத்துவமனை வளாகத்தில் திரண்டு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், மருத்துவர்களைப் பிடித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காவல் துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின்போது நிறைமாத கர்ப்பிணிப் பெண் ரேணுகா தேவியின் உயிரிழப்புக்குக் காரணமான மருத்துவமனை மருத்துவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவக் குழுவினர் ஆய்வு நடத்த வேண்டும்.

தவறான சிகிச்சை முறையால் உயிரிழந்த ரேணுகா தேவியின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் சமரசப்படுத்தப்பட்டு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரேணுகா தேவியின் உடலை உடற்கூறாய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இந்திய மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசனை நடத்திய மருத்துவமனை நிர்வாகம் உயிரிழந்த ரேணுகா தேவியின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகை வழங்க மறுத்து சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுக உள்ளதாகத் தெரிவித்தது. இதனால், ஆத்திரமடைந்த ரேணுகா தேவியின் உறசினர்கள் விடுதலைச் சிறுத்தைகள்கட்சி நிர்வாகிகளுடன் மருத்துவமனை வளாகத்தினுள் ஆரவாரத்தோடு ஆண்- பெண் போலீஸார்களுடன் வாக்குவாதம் செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு தொடர்ந்து பரபரப்பு நிலவியது.

போராட்டம் நடத்தியவர்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு முடிவு ஏதும் எட்டப்படாததால் ஆத்திரமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியேறி காந்தி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
பின்பாக அதே சாலையில் ஊர்வலமாகச் சென்று சிவகாசி மாநகராட்சி பேருந்து நிலையம் முன்பாக காவல்துறையினர் சமாதானப்படுத்தியும் நீண்ட நேரமாக சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக பேருந்து நிலைய வளாகப் பகுதி முழுவதும் எந்தவிதமான வாகனப் போக்குவரத்தும் நடைபெறாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமமடைந்ததையடுத்து மறியல் செய்யத் தூண்டிய 20-க்கும் மேற்பட்ட வர்களை போலீஸார் துரத்தித் பிடித்துக் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அடைத்ததால் பேருந்து நிலைய வளாக சாலைப் பகுதியில் சிறிது நேரம் பொதுமக்களிடையே பதற்றம் தொற்றிக்கொண்டு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கௌதம் கோயல் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சிவகாசி தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் ரேணுகாதேவியின் உடற்கூறாய்வு வீடியோக் காட்சிப் பதிவுடன் நடந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனையின் மருத்துவ அறிக்கையோடு மருத்துவ கவுன்சிலுக்கு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டு சட்டப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டப்படியான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.



















