"உடன் பிறப்புகளின் வாக்குகளைப் பெற்று எங்களின் தயவில் தான் இந்த அரசு.!'- உதயநி...
தூத்துக்குடியில் 'டொர்னடோ' சுழல் காற்று எப்படி ஏற்பட்டது? நிலத்தியல் துறை பேராசிரியர் கூறுவது என்ன?
தூத்துக்குடியில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை கடுமையான வெயில் நிலவி வந்தது. இந்நிலையில், மாலை சுமார் 4.45 மணியளவில் திடீரென வானிலை மாறி, மேக மூட்டம் சூழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் அருகே, வெளிநாடுகளில் அடிக்கடி தோன்றுவதைப் போன்ற சுழல்காற்று (Tornado) உருவானது. தரையிலிருந்து அசுர வேகத்தில் சுழன்றடித்தபடி வான்நோக்கி எழும்பிய இந்த அதிசய நிகழ்வை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தக் சூறாவளி காரணமாக, வாகைகுளம் சுங்கச்சாவடியின் மேற்கூரை உள்கட்டமைப்புகள் அனைத்தும் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பெயர்ந்து, முற்றிலுமாகச் சேதமடைந்தன.
இந்தச் சுங்கச்சாவடி அருகே அமைந்துள்ள தீம் பார்க்கிலும் சூறாவளி காற்று புகுந்ததில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் மற்றும் பொழுதுபோக்குக் கட்டமைப்புகள் முற்றிலுமாகச் சேதமடைந்துள்ளன.
இதுபோன்ற சுழல் காற்று ஏற்படுவது இதுவே முதல் முறை என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இந்தச் சுழல் காற்று எதனால் ஏற்பட்டது என்பது குறித்து தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரியின் நிலத்தியல் துறை பேராசிரியர் முனைவர்.செல்வத்திடம் பேசினோம், "தூத்துக்குடி பகுதியில் அரிதான சூறாவளிக் காற்றுச் சுழல் போன்ற வளிமண்டல நிகழ்வு பதிவாகியுள்ளது. மாலை நேரத்தில் ஏற்பட்ட பலத்த இடியுடன் கூடிய மழை பெய்த நேரத்தில், மேகத்திலிருந்து தரை நோக்கி இறங்கும் சுழலும் தூசி தூண் காணப்பட்டுள்ளது.
அறிவியல் ரீதியாக பார்க்கும்போது, இது ஒரு சிறிய அளவிலான நிகழ்வாக இருக்கக்கூடும். இந்த நிகழ்வு உருவாக காரணமாக, கடலோரப் பகுதியாக இருக்கும் தூத்துக்குடியில் இருந்து அதிகமான வெப்பமான மற்றும் ஈரமான காற்று மேலே எழுந்துள்ளது.
அதே சமயம் மேல்மட்டங்களிலிருந்த குளிர்ந்த காற்று உடன் மோதியதால் வளிமண்டலத்தில் நிலையற்ற தன்மை அதிகரித்து, காற்றின் திசை மற்றும் வேக வேறுபாடு மூலம் சுழற்சி உருவாகியுள்ளது.
இந்தச் சுழலும் காற்று மேலே எழும் காற்று ஓட்டம் மூலம் செங்குத்தாக நீண்டு, மேகத்திலிருந்து கீழே புனல் வடிவ மேகமாக உருவாகி, தரையைத் தொட்டபோது அது ஒரு குறுகிய காலச் சுழல் காற்றாக மாறியது.
சில தகவல்களின்படி, இது மிக நீளமான அல்லது வலுவான சுழல் காற்று அல்ல; மெல்லிய, குறுகிய மற்றும் பலவீனமான சுழல் மட்டுமே காணப்பட்டது, அதனால், பெரிய சேதம் எதுவும் பதிவாகவில்லை.

இந்த நிகழ்வில் முக்கியமானது என்னவென்றால், இந்தியாவில் சுழல் காற்று அரிதானதுடன், தென் இந்தியா குறிப்பாக தமிழ்நாட்டில் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் அபூர்வமாகவே நிகழும். பொதுவாக இத்தகைய சுழல்காற்றுகள் மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளில் மட்டுமே அதிகமாகப் பதிவாகின்றன.
இன்றைய தூத்துக்குடி நிகழ்வு, கடலோர ஈரப்பதம், அதிக வெப்பநிலை மற்றும் பலத்த இடியுடன் கூடிய மேக அமைப்பு சேர்ந்து வந்தால், தமிழ்நாட்டிலும் அரிதாக சுழல்காற்று போன்ற நிகழ்வுகள் உருவாகலாம் என்பதை அறிவியல் ரீதியாக நிரூபிக்கிறது” என்று கூறினார்.

















