முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் 5 ஆண்டுகளில் புதிதாக 30 சிப்காட் தொழில் வளாக...
கிருஷ்ணகிரி திமுக நிர்வாகி மீதான போக்சோ வழக்கு; முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரியில் இரண்டரை வயது சிறுமி, திமுக நிர்வாகியால் பாலியல் வதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கை முறையாக விசாரிக்காத பெண் இன்ஸ்பெக்டர சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் இரண்டரை வயதுச் சிறுமி உடல் நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததால் காவல்துறைக்குப் புகார் சென்று வழக்கை இன்ஸ்பெக்டர் சுமித்ரா விசாரித்தார்.
ஆனால், குழந்தை இறந்ததில் மர்மம் உள்ளது என்று அப்பகுதி மக்களும், பாலியல் டார்ச்சர் செய்யப்பட்டதன் காரணமாக குழந்தை இறந்தது என்று உடற்கூராய்வு அறிக்கையிலும் தெரிய வந்ததால் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்தனர்.

விசாரணையில் குழந்தையின் தாய்க்கும் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பெரியநாயகத்துக்கும் திருமணம் கடந்த உறவிருந்ததும், குழந்தை என்றும் பாராமல் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் குழந்தை இறந்தது என்பதும் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து பெரியநாயகம் போக்சோ சட்டப்பிரிவில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த இன்ஸ்பெக்டர் சுமித்ரா சேலம் மாவட்டம் அம்மாபேட்டை மகளிர் காவல் நிலையத்துக்கு ஏற்கனவே இடமாறுதல் செய்யப்பட்ட நிலையில் வழக்கை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய சேலம் சரக டி.ஐ.ஜி உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சுமித்ரா நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.





















