``அரசுக்கெதிரான வழக்கை நான் விசாரிப்பதை மத்திய அரசு விரும்பவில்லை" - CJI கவாய் ஓ...
கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்
கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை கல்லூரி மாணவியை 3 பேர் கொண்ட போதை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இது தமிழகத்தின் தற்போதைய கேவலமான ஆட்சியை காண்பிக்கிறது. இது திராவிட மாடல் ஆட்சியல்ல. பெண்களுக்கு எதிரான பாலியல் மாடல் ஆட்சி இது. பெண்கள் நடமாட பாதுகாப்பு இல்லை. இதைக் கண்டித்து பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.” என்றார்.
சம்பவம் நடந்த இடத்தில் பாஜக தேசிய மகளிரணி தலைவரும், எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் நேரில் ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து கோவை தெற்கு தாலுகா ஆட்சியர் அலுவலகம் அருகே வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைகளில் பெப்பர் ஸ்ப்ரே, தீப்பந்தம் ஏந்தி பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டும், திமுக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன், “காவல்துறை என்கவுன்டர் நடத்தி இந்த வழக்கை மூடி மறைக்கக் கூடாது. குற்றத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்.
காவல்துறையின் செயல்பாடுகளில் மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆட்சியாளர்களுக்கு டிராமா போட நேரம் உள்ளது. பெண்களை பாதுகாக்க மட்டும் நேரம் இல்லை. மாதம் ரூ.1,000 கொடுத்தால் பெண்கள் உங்கள் பக்கம் நிற்க மாட்டார்கள். எஞ்சியுள்ள 4 மாதங்களிலாவது பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்.” என்றார்.

இதனிடையே சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகில் ஒரு சட்டவிரோத பார் இயங்கி வந்தது. அதை நாம் தமிழர் கட்சியினர் அடித்து நொறுக்கி, ஒருவரை பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக மற்றும் தவெக சார்பிலும் போராட்டம் நடைபெறவுள்ளது.



















