'1 மணி நேரத்தில் 51 விருப்ப மனுக்கள் மட்டுமே விநியோகம்;ஆர்வம் காட்டாத நிர்வாகிகள...
சிக்கன் பிரியாணியுடன் படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து! - போலீஸார் வழக்கு பதிவு
கங்கை ஆற்றை இந்துக்கள் புனித நதியாக கருதுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் இந்துக்கள் இந்த கங்கை ஆற்றிற்கு வந்து புனித நீராடி செல்கின்றனர்.
இந்த கங்கை ஆற்றில் படகில் சிலர் இப்தார் பார்ட்டி நடத்துவதாக போலீஸாருக்கு புகார் வந்தது. பா.ஜ.க யுவ மோர்ச்சா தலைவர் ரஜத் ஜெய்ஸ்வால் இது தொடர்பாக போலீஸில் கொடுத்துள்ள புகாரில், ''சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்களுக்கு கங்கை மிகுந்த மத முக்கியத்துவமானதாகவும், நம்பிக்கையின் மைய அடையாளமாக மதிக்கப்படுகிறது.
ஒவ்வொரு நாளும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கங்கைக்கு வந்து புனித நீராடுகின்றனர். அதோடு சடங்குகள் செய்கின்றனர். அப்படிப்பட்ட கங்கை ஆற்றில் படகில் சென்று இப்தார் பார்ட்டி நடத்தி அதில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு இருக்கின்றனர்.

அதோடு பிரியானி கழுவுகளை கங்கை ஆற்றில் வீசி எறிந்துள்ளனர். இது இந்துக்களின் மத உணர்வை புண்படுத்துவதாக இருக்கிறது''என்று குறிப்பிட்டு இருந்தனர்.
அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து படகில் சென்று கங்கை ஆற்றில் இப்தார் விருந்து நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். இப்தார் விருந்தின் போது எடுக்கப்பட்ட காணொலியை அவர்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். அந்த காணொலியின் அடிப்படையில் இப்தார் விருந்தில் கலந்து கொண்டவர்களை அடையாளம் கண்டுபிடித்து கைது செய்து இருப்பதாக வாரணாசி உதவி போலீஸ் கமிஷனர் விஜய் பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர்கள் ரீல்ஸ் எடுப்பதற்காக இது போன்று படகில் சென்று விருந்து நடத்தியுள்ளனர் என்றும், உண்மையான நோக்கம் என்னவென்று கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகில் சென்றவர்கள் முதலில் நமாஸ் செய்தனர். அதன் பிறகு அவர்கள் சிக்கன் பிரியாணியை சாப்பிட்ட காணொலி சமூக வலைத்தள வெளியானது குறிப்பிடத்தக்கது.

















