Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்
`தமிழக முதல்வர் சொன்ன தைரியத்தில்தான் ஒழிக ஒழிக எனச் சொன்னேன்”- தி.மு.க எம்.எல்.ஏ., மகன் அக்ஷய்
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பின்னர் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வந்த போது, தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்றத்தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., மார்க்கண்டேயனின் மகனும், டெல்லியில் சட்டக் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வரும் அக்ஷய், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ”ஒழிக..ஒழிக..” என்று குரல் எழுப்பினார். அவரை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்க்ஷய், ”தமிழக முதல்வர் இந்த தமிழ்நாட்டிற்கு குரலாக, பாதுகாப்பு கவசமாக இருக்கிறார். அவருடைய குரல்தான் இந்த மாநிலத்தையும் இந்தியாவையும் வரக்கூடிய காலங்களில் காப்பாற்ற முடியும் என்கிற குரலாக உள்ளது.
பாசிச மற்றும் தனது சொந்த கருத்துக்களை நீதிபதி சுவாமிநாதன் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு தீர்ப்பில் இணைத்து எழுதியது போல் எனக்கு தென்பட்டது. மேலும் அவர் ஒரு நிகழ்ச்சியிலும் அதையொட்டி பேசியிருந்தார்.
அந்த தீர்ப்பின் மூலம் என்னால் தீபத்தை ஏற்ற முடியவில்லை . நான் வந்துள்ள இந்த மன்றத்தில் தீபத்தை ஏற்றி விடுவேன் என்று நீதிபதி சுவாமிநாதன் கூறியிருந்தார். அதைக் கண்டு நான் மிகவும் கவலை அடைந்தேன். இதையொட்டி தமிழக முதல்வர் அவர்கள் ஒரு புரட்சிகரமான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார். நாம் இதை செய்வோம். அதனால் வரக்கூடிய பின் விளைவுகளை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினார் இந்த தைரியத்தில்தான் நான் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராக அந்த கோஷத்தை எழுப்பினேன். ஒழிக ஒழிக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ஒழிக என்று சொன்னேன். ”Corruption” என்பது பணத்தால் மட்டும் கிடையாது .

கருத்துக்களாலும் ஆகக் கூடியது. அதேபோன்று ”corrupted” கருத்துகளைக் கொண்ட நீதிபதிகள் இன்று இருக்கின்றனர். விளாத்திகுளம் தொகுதி மக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சார்பில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் மீது நாடாளுமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி எம்.பியிடம் கோரிக்கை மனு கொடுத்திருக்கிறோம். அந்த நீதிபதிக்கு தகுந்த நீதியை பெற்று தருவார் என்று நம்புகிறேன்” என்றார்.














