திருவாரூர்: இறந்தவர் உடலை கடித்த எலி - அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தேறிய அவல...
தருமபுரி: தற்கொலைக்கு முயன்ற சிறுமி; சிகிச்சையின்போது பிரசவம்; போக்சோ வழக்கில் இளைஞர் கைது
பாட்டி, தாய், சிறுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, சிகிச்சையின்போது 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்திய நிலையில் இதற்கு காரணமான வாலிபர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 51 வயது பெண், இவரது 35 வயது மகள், 16 வயது பேத்தி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தருமபுரி ரயில் நிலையம் முன்புள்ள ஆஞ்சநேயர் கோயில் அருகே மயங்கிய நிலையில் கிடந்தனர்.
அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிகிச்சையின்போது கர்ப்பிணியாக இருந்த சிறுமிக்கு குழந்தை பிறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் அறிந்த தருமபுரி நகரக் காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சொந்த ஊரில் அந்தச் சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வந்ததும், அதே பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியான 30 வயதான அருண்குமார் என்பவருடன் ஏற்பட்ட நட்பில் சிறுமி கர்ப்பமடைடைந்ததும் தெரிய வந்தது.

மேலும், சிறுமி கர்ப்பமான விஷயத்தைத் தெரிந்துகொண்ட தாயும், பாட்டியும் மன விரக்தி அடைந்து தருமபுரிக்கு வந்தவர்கள், ரயில் நிலையம் அருகே எலி பேஸ்ட்டை உண்டு தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
இந்த வழக்கு பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொண்டதில் சிறுமியின் கர்ப்பத்துக்குக் காரணமான அருண்குமாரை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தற்போது பிறந்த குழந்தை உள்ளிட்ட 4 பேரும் அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தருமபுரி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
















