`இயற்கை எனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நான் சரியாக நடிக்க விரும்புகிறேன்'- ஈரோடு ...
திண்டுக்கல்: அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி – 3 பேர் மீது வழக்கு பதிவு!
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷீலா. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் பீட்டர் அரசுப் பள்ளி ஆசிரியராக உள்ளார். இவர்களது குடும்ப நண்பரான சென்னையைச் சேர்ந்த ஆரோக்கிய சார்லஸ் என்பவர் மூலம், சேலத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது, சேலம் எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.30 லட்சம் செலவாகும் என்றும் தங்கராஜ் கூறியுள்ளார்.
இதனை நம்பிய ஷீலா மற்றும் அவரது கணவர், கடந்த 15.03.2023 முதல் 15.07.2023 வரையிலான காலகட்டத்தில் தங்கராஜின் வங்கிக் கணக்குகள் மற்றும் கூகுள் பே , போன் பே மூலமாக மொத்தம் 29 லட்சத்தை அனுப்பியுள்ளனர்.
மேலும், தங்களது உறவினர்களான மூவருக்கும் வேலை வாங்கி கொடுக்க சொல்லி, தலா 7 லட்சம் ரூபாய் என மொத்தம் 21 லட்சத்தையும் தங்கராஜின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.50 லட்சம் பணம் கைமாறியுள்ளது.

இதனிடையே, கடந்த 10.04.2023 அன்று தங்கராஜை நேரில் சந்தித்தபோது, எடப்பாடி அரசு கலைக் கல்லூரியின் துணை முதல்வர் அன்பழகன் என்பவரை சந்திக்குமாறு அவர் கூறியுள்ளார். அதன்படி, அன்பழகனைச் சந்தித்தபோது அவர் ஒரு பணி நியமன ஆணையை காண்பித்து, வேலைக்கான ஆணை மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் வரும் என்று நம்பும்படி கூறியுள்ளார். பின்னர் ஜெயப்பிரியா என்பவருக்கு ஓர் அரசு பணி நியமன ஆணையும் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், நீண்ட நாள்களாகியும் வேலை கிடைக்காததால், அந்தப் பணி நியமன ஆணை குறித்து விசாரித்தபோது, அது முற்றிலும் போலியானது என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷீலா, கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு "மீண்டும் பணம் கேட்டு வந்தால் குடும்பத்துடன் கொலை செய்து விடுவோம்" என தங்கராஜூம் அன்பழகனும் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஷீலா திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் சேலத்தைச் சேர்ந்த தங்கராஜ், அன்பழகன் மற்றும் மோகனாம்பாள் ஆகிய 3 பேர் மீதும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 318(3), 318(4), 335, 351(2) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தங்கராஜைக் கைதுசெய்திருக்கின்றனர்.

















