திண்டுக்கல்: `பாஸ்கு மைதானம்னு பேரை மாத்திட்டு அன்னதானம் நடத்துங்க' - போராட்டம் நடத்திய மக்கள்
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதி நி.பஞ்சம்பட்டி கிராமத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஒரே சமுதாயத்தை சேர்ந்த 2,500க்கு மேற்பட்ட கிறிஸ்தவ குடும்பங்களும் 100க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களும் வசித்து வருகின்றனர்.இங்கு 300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கிறிஸ்துவ தேவாலயமும் இதன் அருகே அரசுக்குச் சொந்தமான காலி மைதானம் மற்றும் காளியம்மன், ராமர் கோயில்கள் அடுத்தடுத்து உள்ளன. இந்தக் கோயில்களுக்கு கும்பாபிஷேக விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டன. இந்த விழாவிற்கு அன்னதானம் வழங்குவதற்காக கிறிஸ்துவ தேவாலயம் அருகே உள்ள பொது மைதானத்தில் அன்னதானம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மைதானத்தின் பெயரை பாஸ்கு மைதானம் என மாற்றக் கோரி கிறிஸ்தவ மக்கள் தரப்பில் முன்பிருந்தே கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மைதானத்தில் அன்னதானம் வழங்குவதற்கு கடந்த வாரம் அனுமதி கேட்டு காவல் துறையினர் மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் மனு அளித்திருந்தனர். ஆனால், அனுமதி மறுக்கப்பட்டது. இதனை அடுத்து உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இதனையடுத்து, அரசுக்குச் சொந்தமான மைதானத்தில் அன்னதானம் வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
பொது மைதானத்தை, பாஸ்கு மைதானம் என அழைப்பிதழில் அச்சடித்தால் அன்னதானம் வழங்கலாம் என கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதனை அப்பகுதியில் வசிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் மறுப்பு தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது இதை எதிர்த்து கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதோடு சிறைநிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை விநாயகர் மற்றும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை முன்னிட்டு பொது மைதானத்தில் அன்னதானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, உணவு சாப்பிட்டுச் சென்றனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சம்பட்டியை சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு அரசு வழங்கிய அடையாள அட்டைகளை ஒப்படைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

பின்னர் நுழைவாயில் முன்பு மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் மற்றும் திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.





















