'முதல்வர் விஜய்யா.. ஸ்டாலினா?' டு 'எனக்கு எந்த அதிகாரமும் இல்லங்க' தவிக்கும் மாண...
’திமுக கூட்டணியில் இப்போதைய சூழலில் இடம்பெற இயலாது!’ – சிபிஐ மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் அதிரடி
கோவை சிரியன் சர்ச் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, “நீட், சிபிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் குறித்து மக்கள் எழுப்பும் குரலுக்கு ஒன்றிய அரசு செவிமடுக்க வேண்டும். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என முதல்வர் விஜய் அறிவிக்க வேண்டும். கடந்த ஆட்சியாளர்களை போல இரு மொழி கொள்கையில் முதல்வர் உறுதியாக இருக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ திட்டங்களை தொடர ஒன்றிய அரசு நடவடிக்கைகள் வேண்டும்.
இடைத்தேர்தல் அறிவிக்கபட்ட பின்னர் அன்றுள்ள சூழல் குறித்து மாநில குழு கூடி, எத்தகை ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவது என முடிவு செய்வோம்.
இன்றுள்ள நிகழ்கால அரசியல் சூழலில் தி.மு.க கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகி விட்டது, இந்தியா கூட்டணியில் இருந்து தி.மு.க-வும் விலகிவிட்டது. வேறு சில கட்சிகள் த.வெ.க-வில் அங்கம் பெற்றுள்ளது. இந்த சூழலில் ஒரு அணியாக இணைந்து போட்டியிடும் சூழல் இல்லை. வரும் உள்ளாட்சி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில், அந்த சூழலில் நாங்கள் முடிவு செய்வோம்.
தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.க ஆகியவை ஜனநாயக சக்திகள், அவர்களுடன் இணைந்து எங்களால் பணியாற்ற முடியும், எங்களுக்கு அரசியலில் பகைமுரண் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.தான். மற்ற கட்சிகளுடன் எங்களுக்கு பகைமுரண் கிடையாது, அவர்களுடன் தேச நலன் சார்ந்து ஒன்றிணைந்து போராட முடியும்” என தெரிவித்தார்.

இடதுசாரிக் கட்சிகளை நாங்கள் தான் அனுப்பி வைத்தோம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, “கம்யூனிஸ்ட் கட்சி தனக்கென அமைப்பு நிலைகளைக் கொண்டது, அரசியல் முடிவு எடுக்கிறது. முன்னாள் முதல்வர் ஸ்டாலின் ஏன் அப்படி சொன்னார் என தெரியவில்லை. பத்தாண்டுகளாக அவரை சந்தித்த போது, ஒருபோதும் உட்கட்சி விஷயங்களில் தலையிட்டது கிடையாது. இப்போது அவர் அப்படி பேசியிருக்கக் கூடாது” என்றார்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இருக்கின்றதா என்று கேள்விக்கு, “இப்போதைய சூழலில் ஒரு கூட்டணி சூழல் கிடையாது. த.வெ.க-விற்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். தி.மு.க, அ.தி.மு.க ஆட்சி அமைக்கும் சூழல் இல்லை. ஆளுநர் ஆட்சி வந்து விடக்கூடாது, மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கக்கூடாது என்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது. இரண்டு நாட்களாக நிர்வாக குழு கூடி எடுத்த முடிவின்படி, இன்றுள்ள அரசியல் சூழலில், தேர்தல் அணி சேர்க்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறும் சூழல் இல்லை. இன்றைய அரசியல் சூழலில் ஒரு கூட்டணியில் அணி சேர்ந்து இயங்கும் சூழல் இல்லை. மத்திய கமிட்டி வழிகாட்டுதல் படி இடதுசாரி அமைப்பு குழு இணைந்து பயணிக்கிறோம்” என்றார்.
தி.மு.க கூட்டணியில் இருக்கிறீர்களா, இல்லையா? என அடுக்கடுக்கான கேள்விக்கு, “ஒரு நல்ல மொழி நடையில் நான் சொல்கிறேன். பரபரப்புக்கான வார்த்தையை நீங்கள் தேடுகின்றீர்கள். தி.மு.க கூட்டணியில் இன்று உள்ள சூழலில் இடம்பெற இயலாது. இதைவிட பட்டவர்த்தனமாக சொல்ல முடியாது. புதிய ஜனநாயக சக்தியாக த.வெ.க உருவெடுத்து இருக்கிறது, அதற்கு ஆதரவு அளிக்க வேண்டியதும் ஜனநாயக கடமை” என பதிலளித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”முதல்வர் விஜய், பிரதமரை சந்தித்து என்ன பேசினார் என்பதை பத்திரிக்கையாளர்களை சந்தித்து, சொல்ல வேண்டும். ஊடகங்கள் இல்லை என்றால் ஜனநாயகம் குரலற்று போகும். ஊடகங்கள் இல்லையெனில் ஜனநாயகத்தின் கண்கள் மூடப்பட்டு விடும். தமிழகத்தில் எந்த சேனல்களும் முடக்கக்கூடாது, யூடியூப்பர்கள் கைது செய்யப்படக் கூடாது, கருத்துக்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டும் , தி.மு.க ஆட்சியில் கொடுத்த நல்ல திட்டங்கள், இந்த ஆட்சியிலும் தொடர வேண்டும். இந்தியா கூட்டணியில் நாங்கள் இடம் பெற்று இருக்கிறோம். மதச்சார்பின்மையில் உறுதியாக இருக்கிறோம். தமிழக வெற்றி கழகத்தின் அணுகுமுறையை பொறுத்துதான் எங்களது ஆதரவு இருக்கும்” என்றார்.
கல்லாப்பெட்டி கூட்டணி என்ற விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, “எங்களைப் பொறுத்தவரை புதிய கட்சி, புதிய தலைவர், புதியவராக இருந்தாலும் அவர் கற்றுக் கொள்வார் என நம்புகின்றோம். இவ்வளவு மக்கள் வாக்களித்து இருக்கின்றனர். கல்லாப்பெட்டி, சோபா எங்கள் பக்கம் நெருங்க முடியாது. 100 ஆண்டுகளில் எங்கள் அருகில் கூட நெருங்க முடியாது. கல்லாப்பெட்டி, சோபாவுடன் எங்களை ஊடகங்கள் ஒப்பிடக்கூடாது. சில விஷயங்களை கடந்து போக வேண்டும், அவர் பேசிய பேச்சின் மீது சவாரி செய்ய வேண்டாம்” என பதிலளித்தார்.



















