"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரி...
ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?
ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர். ஐ.நாவில் பேசப்போகும் வாய்ப்பு, யாருக்கான குரலாக அது ஒலிக்கும் உள்ளிட்ட விஷயங்கள் பற்றிப் பேசுகிறார்.

"சின்ன வயசுல இருந்தே சமூகத்துக்காக ஏதாவது பண்ணணும்ன்ற எண்ணம் இருந்துச்சு. ஸ்கூல் முடிச்சதும் மதுரை அமெரிக்கன் கல்லூரியில Religion, Philosophy, Sociology இந்த மூணு பாடங்களையும் ட்ரிபிள் மேஜரா படிச்சேன். சமூகத்தை இன்னும் ஆழமா புரிஞ்சுக்கணும்ன்றதுக்காகவே அந்தப் படிப்பை தேர்வு பண்ணேன். இப்போ மாஸ்டர் ஆஃப் சோஷியல் வொர்க் படிச்சிட்டு இருக்கேன்.
படிப்பு ஒரு பக்கம் போயிட்டு இருந்தாலும், 'KYRO' (Know Your Rights India) அப்படின்ற அமைப்பை 2020-ல தொடங்கி, வழக்கறிஞர்கள் குழுவுடன் இணைந்து, எளிய மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை கிடைக்க உதவினோம். சில நீதிபதிகளுடன் இணைந்து சட்ட விழிப்பு உணர்வு முகாம்கள் நடத்தினோம். அதேபோல பொதுமக்கள், அவர்களுக்கான உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ள விழிப்பு உணர்வு நிகழச்சிகள் நடத்தினோம். இளைஞர்களுக்கு கம்ப்யூட்டர், AI மாதிரியான திறன் மேம்பாட்டு பயிற்சிகள், இளைஞர்களை தலைவர்களாக உருவாக்கும் நோக்கிலும் பயிற்சி அளித்து வருகிறோம்.

இதுபோன்ற, சமூகப் பணிகள் மூலமா, ஜெர்மனியில CDU (கிறிஸ்டியன் டெமாக்ரடிக் யூனியன்) ஆதரவோட நடந்த தலைமைத்துவப் பயிற்சி திட்டத்துக்குத் தேர்வாகினேன். அதுக்கப்புறம் சமூகப் பணிக்கான ஃபெலோஷிப் திட்டத்துலயும் கலந்து கொண்டேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துல நடந்த "Service to Leadership" நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளரா பணியாற்றினேன். ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், பிற நாடுகளில் உள்ள இந்திய தூதரக நிகழ்வுகள் எனப் பல சர்வதேச மேடைகள்ல இந்திய இளைஞர்களோட பங்களிப்பை பற்றி பேசுற வாய்ப்பு கிடைச்சது.
அடுத்ததா, ஜூலை 13-ம் தேதி நடக்குற ஐ.நா சபையின் அமர்வில் உரையாற்றும் வாய்ப்பு கிடைச்சிருக்கு. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலின் கீழ் செயல்படும் ஆலோசனை அமைப்பான பூர்வீக மக்களின் உரிமைகள் நிபுணர் அமைப்பின் (EMRIP) அமர்வில் கலந்துகொள்றேன். அது, தமிழகத்தில் வசிக்கும் காணிப் (காணிக்கார்) பழங்குடியின மக்களின் மொழி, கலாசாரம், பாரம்பர்யம், பழக்க வழக்கங்கள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சிட்டு வருது.

ஒரு சமூகத்தோட அடையாளம் அதோட பண்பாட்டுலதான் இருக்கு. அதனால அவங்களோட குரல் உலக அளவுல கேட்கணும் அப்படின்றதுக்காகத்தான் இந்த விஷயத்தை ஐ.நா மேடையில பேசப் போறேன். இந்த உலகம் அதிகம் கவனிக்காத மக்களின் குரலை உலக மேடையில கொண்டு சேர்க்க கிடைச்ச ஒரு வாய்ப்பா இதைப் பார்க்குறேன்" என்கிறார்.
வாழ்த்துகள் அபிஷேக் அசீர்!
- வெ.பால சண்முகம்



















