"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரி...
`என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன்!’ - ஆட்டோ ஓட்டுநரின் விபரீத முடிவு; பகீர் பின்னணி!
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகேயுள்ள சக்கரகுப்பம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினி (வயது 41). இவரின் மனைவி கோமதி. இவர்களின் 15 வயது மகள் தர்ஷினி, கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திடீரென தூக்குப்போட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், ``தர்ஷினியின் தற்கொலைக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி, அவரின் மகன் நித்தின்குமார், மகள் இலக்கியா, கணவன் செங்குட்டுவன் ஆகியோர் தான் காரணம்’’ என தர்ஷினியின் தந்தை ரஜினி ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அந்த புகாரில், ``ரேவதியும் அவரின் மகள், மகனும் என்னுடைய வீடு புகுந்து என் மகள் தர்ஷினியை அடித்து உதைத்ததோடு, ஆடையைக் கிழித்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள். இதனால், மனமுடைந்து என் மகள் தர்ஷினி தற்கொலை செய்துகொண்டார்’’ எனக் கூறியிருந்தார்.

போலீஸாரும் விசாரணை நடத்தி, செங்குட்டுவனை தவிர்த்து ரேவதி, நித்தின்குமார், இலக்கியா ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த நிலையில், வெளியே சுற்றித்திரிந்த செங்குட்டுவன் அவ்வப்போது ரஜினி குடும்பத்தினரிடம் `உங்களையும் கொல்வோம்’ என மிரட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் ஜோலார்பேட்டை காவல் நிலையம் சென்று புகாரளித்திருக்கிறார், ஆட்டோ ஓட்டுநர் ரஜினி. இந்த புகாரின்மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட ரேவதி உள்ளிட்ட மூன்று பேரும் ஜாமீனில் வெளியே வந்திருக்கின்றனர். இவர்களும் ரஜினி குடும்பத்துக்கு மேலும் அச்சுறுத்தலாக இருந்திருக்கின்றனர். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான ஆட்டோ ஓட்டுநர் ரஜினி, நேற்றைய தினம் தூக்குப்போட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டார். முன்னதாக, வீடியோ ஒன்றையும் பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில் பேசும் ரஜினி, ``என் மகளைக் கொலைசெய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ரேவதி குடும்பத்தினர் தாக்கினார்கள். என் மகள் இல்லாத இந்த உலகில், என்னால் நிலையாக வாழ முடியவில்லை. இப்போது எந்த நேரமாக இருந்தாலும், என் உயிரை மாய்த்துக்கொள்ள துணிந்துவிட்டேன்.

என்னையும் தற்கொலை மனநிலைக்கு ஆளாக்கியது செங்குட்டுவன், ரேவதி, இலக்கியா, நித்தின்குமார் ஆகியோர் தான். என் வாகனத்தையும் உடைத்து என்னையும் தாக்கிவிட்டார்கள். முதலமைச்சர் விஜய் அய்யா, இது என்னுடைய வாக்குமூலம். இப்போது, என் மகள் இறந்த மாதிரியே, நானும் சாகப் போகிறேன். இதற்காக அவர்களுக்குத் தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்கிறார், விரக்தியான மனநிலையோடு. இதையடுத்து, ரஜினியின் உடலை மீட்ட போலீஸார், வீடியோ காட்சிகளின் அடிப்படையில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
















