"இன்ஸ்டா காதலை கைவிட மறுத்த தங்கை; கொலை செய்த அண்ணன்" – ஆணவக் கொலையா? - போலீஸாரி...
இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!
இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. மகாராஷ்டிராவில் பிரதான தொழில் விவசாயமாக இருக்கிறது. இந்த ஆண்டு பருவமழையும் தாமதம் அடைந்துள்ளது. லத்தூர் அருகில் விவசாயி ஒருவர் உழவடிக்க இருந்த இரண்டு காளை மாடுகளில் ஒன்று இடி தாக்கி இறந்ததால், தன்னுடைய மனைவியை கலப்பையில் பூட்டி உழவடித்த வீடியோ, வைரலாகி கிருக்கிறது.
லத்தூரில் இருந்து 63 கி.மீ தொலைவில் உள்ள பொம்பாலியில் விவசாயி காஷிநாத் கெய்க்வாட், பருவமழை தொடங்கும் முன்பு தனது 8 ஏக்கர் நிலத்தை உழ நினைத்தார். ஆனால் அவரிடம் இருந்த இரண்டு காளைகளில் ஒன்று மின்னல் தாக்கி இறந்துவிட்டது.

ஏற்கெனவே கடன் சுமை அதிகமாகி இருக்கும் நிலையில், புதிய காளை மாடு வாங்க அவரிடம் பணம் இல்லை. என்ன செய்வது என்று திகைத்துக்கொண்டிருந்த கெய்க்வாட்டிற்கு அவர் மனைவி ஹவுசபாய் வழிகாட்டினார்.
தான் ஒரு காளைமாட்டிற்கு பதில் கலப்பையை இழுப்பதாகத் தெரிவித்தார். அவர்கள் தோட்டத்தில் உழவடித்த காட்சி, சமூக ஊடகங்களில் பரவியது. ஒரு காளை மாட்டுடன் சேர்ந்து ஹவுசபாய் கலப்பையைக் கழுத்தில் மாட்டி இழுத்துச் சென்றதைப் பார்த்து அனைவரும், அவர்கள் மீது இரக்கப்பட்டனர்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் அதை விரைவாகப் பெரிதாக்கி, ஒரு விவசாயியின் குடும்பத்தை எப்படி இந்த நிலைக்குத் தள்ள முடியும் என்று கேள்வி எழுப்பி இருந்தனர்.
அவர்களின் இக்கட்டான நிலையை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உடனடியாக கவனித்தார். லத்தூர் கலெக்டர் பாரத் பஸ்தேவாட், முதன்மை செயலாளர் ஸ்ரீகர் பர்தேஷி ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினார். புதன்கிழமை, பல மாநிலத் துறைகளின் அதிகாரிகள் புதிய காளை மாட்டை விலைக்கு வாங்கிக்கொண்டு வந்து கெய்க்வாட்டிடம் ஒப்படைத்தனர். அதனை பார்த்ததும் கெய்க்வாட்டும் அவரின் மனைவியும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
ஹவுசபாய் இது குறித்து கூறுகையில், "எட்டு ஏக்கர் உழவு செய்யப்படாத நிலத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம், என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தோம். இப்போது, அந்த கவலை குறைந்திருக்கிறது" என்று அவர் கூறினார். கெய்க்வாட்டிற்க்கு அவர்கள் பயிரிடும் நிலம் சொந்தமில்லை. குத்தகைக்கு நிலம் வாங்கி விவசாயம் செய்து வருகின்றனர்.

கெய்க்வாட்டிற்கு நான்கு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் ஆவர். அவர்களுக்குத் திருமணமாகிவிட்ட நிலையில், அவர்களின் போராட்டம் அமைதியாக நடந்துகொண்டிருக்கிறது. தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) எம்.எல்.ஏ ரோஹித் பவார் இந்தச் சம்பவத்தை, 'உணவு வழங்குபவரின் இதயத்தை உருக்கும் அவலநிலை' என்று கூறினார்.
அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், `தேசத்திற்கு உணவளிக்க கடினமாக உழைக்கும் விவசாயியின் குடும்பம், விலங்குகளின் இடத்தைப் பிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அது சோகமானது மட்டுமல்ல, மிகவும் வேதனையானது. உள்ளூர் அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் முதல்வர் இந்தச் சம்பவத்தை உடனடியாகக் கவனத்தில் கொண்டு, இந்த குடும்பத்திற்கு உடனடி உதவியை உறுதிப்படுத்த வேண்டும்' என்று வலியுறுத்தியிருக்கிறார்.



















