திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் மீது எஃப்.ஐ.ஆர் - பெண் தயாரிப்பாளர் புகாரின் பேரில் நடவடிக்கை
பெண் தயாரிப்பாளரை பலர் முன் மன்னிப்பு கேட்க வைத்து அவமானப்படுத்திய விவகாரம் தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர்களான கதிரேசன், ராதாகிருஷ்ணன் இருவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இருவரையும் கைது செய்ய போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
மயங்கினேன் தயங்கினேன், ஜின் ஆகிய படங்களைத் தயாரித்தவர் ராஜேஸ்வரி வேந்தன். கடந்த ஆட்சியில் அரசு மானியத்துக்கான திரைப்படத் தேர்வுக் கமிட்டியில் உறுப்பினராகவும் இருந்தார்.
தயாரிப்பாளர் சங்கத்துக்கு நடந்த தேர்தலில் போட்டியிட இவர் முயன்ற போது அதைத் தடுக்கும் நோக்கத்தில் இவர் மீது சங்க நிர்வாகிகள் சில நடவடிக்கைகள் எடுத்து சங்கத்தில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஏற்கனவே விகடன் தளத்தில் இவர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

''திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துல முரளி ராமசாமி அணியில தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு உறுப்பினரா ஒரு தடவை இருந்தேன். அந்தச் சமயத்துல சங்கப் பதிவுப் பிரச்னை தொடர்பா அவ்வளவு வேலைகள் செஞ்சிருக்கேன். அதுக்கு முன்னாடி ரெண்டு முறை நியமன உறுப்பினரா இருந்தேன்.
பொதுக்காசை எடுத்து மீட்டிங்னு மிக்சர் சாப்பிட்டுட்டு கலையறது எனக்குப் பிடிக்காது. நிர்வாகிகளை நிறையக் கேள்வி கேட்பேன். கேள்வின்னா வரவு செலவு முறையாக் காட்டுங்க, பொதுக்குழுவை உரிய நேரத்துல கூட்டுங்கன்னு சங்க நலன் தொடர்பான கேள்விகள்தான். அது இவங்களுக்குப் பிடிக்கலை.
தேர்தல்ல நிக்க விடாம தடுத்தாங்க. சுயேட்சையா துணைத் தலைவர் பதவிக்கு போட்டி போட்டு 357 ஓட்டு வாங்கினேன். செயலாளர் பதவிக்கு நிற்க நினைச்சேன். ஜெயிச்சுடுவேனோனு பயந்து சங்கத்துல இருந்து நீக்கிட்டாங்க' என அப்போது பேசியிருந்தார்.
விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்ற போதும் கூட சங்கத்துக்கு நடந்த தேர்தலில் ராஜேஸ்வரியால் போட்டியிட முடியவில்லை.
தொடர்ந்து தேர்தல் நடந்து தற்போது ஆட்சியும் மாறியிருக்கிற சூழலில் ராஜேஸ்வரியின் புகார் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜேஸ்வரியிடம் பேசினோம்.
''உப்பைத் தின்னவங்க தண்ணி குடிச்சாகணூம்கிற நீதிதான். ராதாகிருஷ்ணன்லாம் தயாரிப்பாளர் சங்கத்தைப் பிடிச்ச கேடு. என்ன படம் தயாரிச்சிருக்கார்னு தயாரிப்பாளர் சங்கத்துல செயலாளர்ங்கிற அதிகாரமிக்க பொறுப்புல வருஷக் கணக்குல உட்கார்ந்துகிட்டிருக்கார் தெரியலை. ஒரு படம் கூட தயாரிக்காதவங்களையெல்லாம் உறுப்பினரா சேர்த்து வச்சிருக்கார். சங்கத்துக்கு ஏதாவது பிரச்னைகள் வந்தா கட்டப்பஞ்சாயத்து பண்றது, அதுமூலமா பணம் சம்பாதிக்கிறது. இதைத் தவிர வேறெதுவும் தெரியாது.தேர்தல்ல நிக்கறது தொடர்பான பிரச்னை உண்டான போது என்னை அவ்வளவு அவமானப்படுத்தினார். அதனாலதான் மகளிர் ஆணையத்துல புகார் தெரிவிச்சா, அங்க வந்து தலைவரா இருந்த மேடம் கிட்ட 'நானும் உங்க கட்சிதான்'னு பல் இளிச்சார்.
அவருக்கு எப்பவும் பதவியில ஒட்டிகிட்டே இருக்கணும்.
அவருக்கு பாடம் புகட்டறது சங்கத்துக்குச் செய்கிற நல்ல விஷயங்கிறதால இந்த விவகாரத்துல விடாம போராடிட்டிருக்கேன்'' என்றார் அவர்.
திமுக அதிமுக என எந்த ஆட்சி வந்தாலும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் ராதாகிருஷ்ணன் கை ஓங்கியே இருந்தது. அடிப்படையில் திமுகவில் இருந்தாலும் ஸ்டாலினின் சொல்லுக்கே கட்டுப்படாமல் இவர் நடந்த சம்பவங்களும் உண்டு. அப்படிப் பட்ட ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர்கள் இருவரும் தவெக அரசால் கைது செய்யப் படுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.




















