'மோடி அரசின் தவறுக்கு மக்கள் விலை கொடுக்கிறார்கள்!' - பெட்ரோல், டீசல் விலை உயர்வ...
தூத்துக்குடி: மின்கசிவால் சிறுவன் உயிரிழப்பு; மின்சாரத் துறையின் அலட்சியமா? என்ன நடந்தது?
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த தனபால் என்பவரின் 8 வயது மகன் உதய சுதர்சன். இச்சிறுவன் பள்ளி கோடை விடுமுறைக்காக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள தனது தாத்தா முத்துச்சாமி மற்றும் பாட்டி லிங்ககனி ஆகியோரின் வீட்டிற்குக் கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்துள்ளான்.
இந்த நிலையில், சிறுவன் உதய சுதர்சன் வீட்டின் வெளியே பந்து வைத்து விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது விளையாடிய பந்து, அருகில் உள்ள சௌந்தரராஜன் என்பவரது வீட்டின் அருகே இருந்த ஒரு சிறிய சந்திற்குள் விழுந்துள்ளது. அந்தச் சந்தில் ஏற்கனவே மின்கசிவு இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், பாதுகாப்பு கருதி சௌந்தரராஜன் அந்தச் சந்தை ஓலைகளை வைத்து மறைத்து வைத்துள்ளார்.
இதையறியாமல், பந்தை எடுப்பதற்காக அந்த ஓலைகளைப் பிரித்துக்கொண்டு சிறுவன் உள்ளே சென்றபோது, அங்கு எதிர்பாராத விதமாக மின்கசிவு ஏற்பட்டு மின்சாரம் தாக்கியுள்ளது.
இதில் சிறுவன் தூக்கி வீசப்பட்டான். இதில், சிறுவனின் வலது கை மற்றும் வலது நெஞ்சுப் பகுதியில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனே அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால், மின்சாரம் தாக்கிய வேகத்தில் சிறுவன் உதய சுதர்சன் பரிதாபமாக உயிரிழந்தான்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீஸார் விரைந்து சிறுவனின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின்கசிவு குறித்துத் தெரிந்திருந்தும் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா அல்லது மின்சாரத் துறையின் அலட்சியமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விடுமுறைக்கு வந்த இடத்தில் சிறுவன் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
















