`மாஸ் மாஸ் பக்கா மாஸ்' - Porsche, BMW ஆடம்பர கார்களின் அட்டகாசமான அணிவகுப்பு | P...
நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடைபிடிக்குமானால்.. - எச்சரிக்கும் தயாரிப்பாளர் சங்கம்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சங்கத் தலைவர் தமிழ்க்குமரன் மற்றும் தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.ஏ.சந்திரசேகர், எல்.கே.சுதீஷ், சுஜாதா விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்பட மறுசீரமைப்பு குறித்த தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் சங்கம் ஆகிய சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் புதிய ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும் என்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இது பற்றி தயாரிப்பாளர்கள் சிலரிடம் பேசினால் `` தயாரிப்பாளர்கள் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் தமிழ் சினிமாவில் தற்போது ஒடிடி மற்றும் சாட்டிலைட் வியாபாரம் சரிந்து வரும் சுழலைக் கருத்தில்கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ளதுபோல, நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் ரெவன்யூ ஷேர் முறையில் தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து படம் நடிக்க வேண்டும். தயாரிப்பாளர்களின் லாப நஷ்டங்களில் பங்கேற்றவேண்டும் என்று ஏற்கெனவே நடைபெற்ற பொதுக்குழுவில் முடிவெடுத்து நடிகர் சங்கத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளார்கள்.

மேலும் நடிகர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திடவும் வரவில்லை. ஆந்திராவில் உள்ள தயாரிப்பாளர்கள் அங்குள்ள நடிகர்களால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் தற்போது விரல்விட்டு எண்ணக்கூடிய தயாரிப்பாளர்கள்கூட இனி திரைப்படங்கள் எடுக்க தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இனி வரும் காலங்களில் மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் ரெவன்யூ ஷேர் முறையில் மட்டுமே தயாரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விஷயத்தினை சினிமாத்துறையில் உள்ள அனைவரின் கவனத்திற்கும் கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யவும், நடிகர்கள் சங்கம் தொடர்ந்து இதே போக்கை கடை பிடிக்குமானால் தொடர் வேலை நிறுத்தம் செய்யவும் பொதுக்குழுவில் தீர்மானமாக நிறைவேற்றியிருக்கிறோம். அதைப்போல ஓடிடி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து கலந்தாய்வுக் கூட்டம் நடத்த உள்ளனர். அதேபோல, சங்கத்தின் சார்பில் யூடியூப் சேனல் ஒன்றும் ஆரம்பிக்க உள்ளனர்.'' என்கிறார்கள்.

பொதுக்குழுவில் பங்கேற்ற எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, ``தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் இதற்கு முன்னர் சின்னதாக பிளவுபட்டிருந்தது. தமிழ்க்குமரன் தலைவரான பிறகு ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தியிருக்கார். தனியாகச் சென்ற அமைப்புகள் இப்போது ஒத்துழைப்பு கொடுக்கும் அமைப்பாக மாறி வருகிறது. ரொம்ப அருமையாகக் கையாளுகிறார். சங்கத்தின் நிதி நிலைமை மோசமாக இருக்கும் காலகட்டத்தில்கூட அவர் பதவி ஏற்ற சில நாட்களிலேயே தயாரிப்பாளருக்கு இன்ஷுரன்ஸ் வசதி ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். அவர் மீது நம்பிக்கை இருக்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் திரைப்பட சங்கம் ஒரு வலுவான நிலைக்கு வரும். நாங்க நினைக்கிறதை சாதிப்போம். நடிகர்களுடன் இணைக்கமாக உட்கார்ந்து பேசுவோம். அவங்களும் தயாரிப்பாளர்களை தூக்கி எறிபவர்கள் அல்ல. தயாரிப்பாளர்கள் மீது நல்ல மரியாதை உள்ளவர்கள் தான் நடிகர்கள். நடிகர்கள் இல்லாமல் தயாரிப்பாளர்கள் இல்லை. தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடிகர்கள் இல்லை. நடிகர்களுடன் உட்கார்ந்து பேசும்போது இணக்கமான சூழல் உருவாகும்'' என்கிறார் எஸ்.ஏ.சி.
















