நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி - 3 வார...
நாகர்கோவில்: உடலில் 19 காயங்கள்; சிறையில் இளைஞரை அடித்துக் கொன்றது உறுதி - 3 வார்டன்கள் கைது!
கன்னியாகுமரி மாவட்டம், தென்தாமரைக்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈத்தன்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரி வர்மன் (34). வீட்டுக்கு அருகே பெட்டிக்கடை வைத்திருக்கும் சபரி வர்மன் குட்கா விற்பனை செய்ததாக கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணை கைதியாக நாகர்கோவில் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் நேற்று (ஜூன் 13-ம் தேதி) இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல் ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் காயங்கள் இருப்பதாகக் கூறி உறவினர்கள் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்தியதுடன் பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்கவில்லை. இன்றும் பிணவறை முன்பு உறவினர்கள் போராட்டம் நடத்தினர். சபரி வர்மனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய உறவினர்களுக்கு நாகர்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ ஆஸ்டின் ஆதரவாக களம் இறங்கினார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் சபரி வர்மன் சிறையில் மரணமடைந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு குரல் கொடுத்தனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சத்தியமூர்த்தி முன்னிலையில் சபரிவர்மன் உடல் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மேலும், பிரேத பரிசோதனை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. அதில் சபரி வர்மனின் உடலில் சுமார் 19 காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. எனவே, சிறைக்குள் வைத்து சிறை வார்டன்கள் சபரி வர்மனை தாக்கியதும், அதனால் அவர் இறந்ததும் உறுதியானது. இதற்கிடையே சபரி வர்மனின் மனைவி அனந்தவள்ளி தனது கணவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நேசமணி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

சபரி வர்மன் அடித்துக் கொலைசெய்யப்பட்டது உறுதியானதைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய சிறை வார்டன் ஜெகன், இரண்டாம் நிலை காவலர் சிவகுமார், தலைமை சிறை காவலர் சுரேஷ் என்ற திருமலை நம்பி ஆகிய மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 12-ம் தேதி இரவு சிறைக்குள் தூக்கம் வராமல் சபரி வர்மன் சத்தம்போட்டதாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் முதற்கட்ட விசாரணையில் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விரிவான விசாரணை நடத்திய பிறகே கூடுதல் தகவல்கள் வெளியாகும்.













.jpg)




