திருச்சி கலெக்டர் சேரில் அமர்ந்து ரீல்ஸ் வெளியிட்ட வடமாநில இளைஞர் - உலா வரும் பர...
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் வட்டமலை வேலாயுதசுவாமி : தீராத மனக் கவலை தீர்க்கும் திருக்கோயில்!
குன்றுதோறும் கோயில்கொண்டு அருளும் தெய்வம் முருகப்பெருமான். மலைமேல் இருக்கும் குமரனை சென்று தரிசனம் செய்தாலே வாழ்வில் மேன்மை உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட அற்புத பலன்களைக்கொடுத்து வாழ்வில் மாற்றங்களை அருளும் அற்புதத்தலம் ஒன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் இருந்து சேலம் செல்லும் வழியில், சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் தலம்.
சிறப்பு மிக்க இந்த ஆலயத்தின் தலவரலாறு சித்தர் ஒருவரோடு தொடர்புடையது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன், முருக பக்தரான சித்தர் ஒருவர் இந்த மலைப்பகுதி வழியே பயணப் பட்டார். அடிவாரத்தில் ஓரிடத்தில் சிறிதுநேரம் அமர்ந்து தவத்தில் ஆழ்ந்தார். அப்போது ஓர் அசரீரி, ''பக்தனே, இந்த மலையின் மீது மேற்குப்புறத்தில் நான் குடிகொண்டிருக்கிறேன். உன் கண்களுக்கு மட்டுமே புலப்படுவேன்'' என்று ஒலித்தது.

அதை முருகனின் கட்டளையாகவே உணர்ந்த சித்தர், மலைக்கு மேல் ஏறிச்சென்றார். அங்கே, அசரீரி குறிப்பிட்ட இடத்தில், மயில் மீது அமர்ந்த கோலத்தில் கருணையே வடிவான வேலாயுத ஸ்வாமி காட்சியளித்து மறைந்தார். சித்தர் இப்பிறவியில் செய்த தவப்பயனை அடைந்த மகிழ்ச்சியில் அந்த இடத்திலேயே சிறு குடிசை அமைத்து வேலாயுத ஸ்வாமி சிலையையும் வேலாயுதத்தையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
தொடர்ந்து, மலைக்கு மேல் இருந்த தீர்த்தச் சுனையில் இருந்து நீரெடுத்து வந்து வேலுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு முருகனின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்றார். இதைத் தொடர்ந்து, கடும் தவத்தில் ஆழ்ந்து விடும் நோக்கத்துடன், மலையின் நடுப்பகுதியில் உள்ள குகைக்குள் சென்ற சித்தர், அதன் பிறகு வெளியே வரவே இல்லையாம். இந்த குகை இன்று, 'சித்தர் குகை' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் செய்தியை அறிந்த மக்கள் மலையேறிவந்து சித்தர் உருவாக்கிய குடிசைக்கோயிலில் வழிபாடு செய்தனர். அப்படி வந்து வேண்டியவர்களுக்கு வேண்டும் வரம் அருள்பவனாக அந்த வேலாயுத சுவாமி திகழவே பக்தர்கள் அவனைக் கொண்டாடத் தொடங்கினர்.

பிற்காலத்தில், சித்தர் உருவாக்கிய குடிசை இருந்த இடத்தில் தற்போது திருக்கோயில் கட்டப்பட்டள்ளது. ஆலயத்தின் மூலவராக வேலாயுதசுவாமியே அருள்கிறார். அவரின் திருக்கோலத்தைக் காணக்காண மனம் மகிழ்ச்சியும் ஆனந்தமும் சிலிர்ப்பும் அடைகிறது. முருகப்பெருமானே இங்கே மற்றொரு சந்நிதியில் வள்ளிதெய்வானை சமேதராகவும் காட்சி அருள்கிறார். மேலும், காசி விஸ்வநாதர், துர்கை ஆகியோருக்கும் இங்கு தனிச் சந்நிதிகள் உள்ளன.
இங்கு வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு உள்ள திருமணத் தடை, குழந்தைப்பேறு இல்லாமை, தீராத மனக் கவலை ஆகிய பிரச்னைகள் நீங்குகின்றன. வாழ்க்கையில் இதற்கு முன்பு இருந்த நிலை மாறி தொழில் மேன்மை, வேலையில் முன்னேற்றம், செல்வவளம் சேரல் என நற்பலன்களைப் பெறுகிறார்கள். பேச்சில் பிரச்னை இருக்கும் குழந்தைகளை இங்கு அழைத்துவந்து வழிபடச் செய்தால் விரைவில் பேசும் திறன் வாய்க்கும் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் இங்கு வந்து சிறிது நேரம் அமர்ந்து முருகனை மனதில் இருத்தி தியானம் செய்தால் மனம் அடங்கி பேரானந்தத்தை அனுபவிக்க முடியும் என்கிறார்கள் பக்தர்கள். பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை ஆகிய திருநாள்கள் இங்கே வெகுவிசேஷம். அதேபோல், பெளர்ணமியில் கிரிவலம் வந்து வணங்குவதும் விசேஷ வழிபாடாகும்.

இந்த ஆலயத்தில் இருக்கும் தீர்த்தக் கிணற்றின் நீரானது, புனிதமாகக் கருதப்படுகிறது. இந்த மலைக்கோயிலில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் பவானி கூடுதுறையில் சங்கமிக்கும் அமிர்த நதி, காவிரி, பவானி ஆகிய மூன்று நதி தீர்த்தங்களும் இந்தக் கிணற்றில் ஊறுவதாகவும், அதனால் இது புனிதத்தன்மை மிக்கதாகவும் கருதப்படுகிறது. இந்த நீரைக் கொண்டுதான் தினமும் வேலாயுத சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாமும், நமது வெவ்வினைகள் யாவும் தீர, வட்டமலை சென்று வேலாயுத சுவாமியை வழிபட்டு வருவோம். வாழ்க்கை வளமாகும் நலமாகும்.




















