`தொடர்ந்து வட மாநில இளைஞர்கள் கைதுசெய்யப்படுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது!' - ...
`பாலங்களின் மனிதர்’ கிரிஷ் பரத்வாஜ்; 140+ பாலங்களைக் கட்டி கிராமங்களை இணைத்த சாதனையாளர்!
ஒவ்வொரு நாளும் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள, தடைகளைத் தகர்த்து சாதனை படைத்த மனிதர்களின் வாழ்க்கைக் கதை ஒரு சிறந்த உந்துசக்தியாக அமையும். அப்படிப்பட்ட ஒரு மாமனிதர்தான் கிரிஷ் பரத்வாஜ் (Girish Bharadwaj).
ஒரு சிறிய மெக்கானிக்கல் ஒர்க்ஷாப் மூலம் தொடங்கி, இன்று 140-க்கும் மேற்பட்ட தொங்கு பாலங்களைக் கட்டி லட்சக்கணக்கான கிராம மக்களின் வாழ்க்கையை நகரத்துடன் இணைத்த இவரது கதை, தன்னம்பிக்கைக்கும் சமூக சேவைக்கும் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

மே 2, 1950-ம் ஆண்டு கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள அரம்பூர் என்னும் ஒரு குக்கிராமத்தில் பிறந்தார் கிரிஷ். இவருடைய தந்தை பாலேக்கல கிருஷ்ண பட் மத்திய பொதுப்பணித்துறையில் பொறியாளராகப் பணியாற்றியவர். தந்தை பொறியாளராக இருந்தாலும், இவர்களது குடும்பம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
கிரிஷ் பரத்வாஜ் 1973ம் ஆண்டு மாண்டியாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். பெரிய நகரங்களுக்குச் சென்று வேலை தேடுவதற்குப் பதிலாக, தனது சொந்த ஊரிலேயே ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.
அதன்படி, 1975ம் ஆண்டு 'ரேஷனல் இன்ஜினியரிங் இண்டஸ்ட்ரீஸ்' என்ற பெயரில் ஒரு சிறிய இரும்புப் பட்டறையைத் தொடங்கினார். இதுவே பின்னாளில் 'ஆயஷில்பா' (Ayasshilpa) என உருவெடுத்து அவரது மிகப்பெரிய பயணத்திற்கு அடித்தளமாக அமைந்தது.
அரம்பூர் கிராம மக்கள் பல ஆண்டுகளாகவே ஊரின் எல்லையில் ஓடும் பாயஸ்வினி ஆற்றைக் கடந்து செல்வதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். மழைக் காலங்களில் குழந்தைகள் பள்ளிக்கோ, பெரியவர்கள் மருத்துவமனைக்கோ செல்ல முடியாமல் தனித்து விடப்பட்டனர்.
1989ம் ஆண்டு, கிராம மக்கள் ஒன்று திரண்டு கிரிஷிடம் வந்து, "எங்கள் கஷ்டத்தைப் போக்க நீங்கள்தான் ஆற்றுக்குக் குறுக்கே ஒரு பாலம் கட்டிக் கொடுக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்தனர்.

அவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியர் என்பதால் அவருக்குப் பாலம் கட்டும் சிவில் இன்ஜினியரிங் தொழில்நுட்பம் முழுமையாகத் தெரியாது. அந்தக் காலகட்டத்தில் இணையதளமோ, கூகுள் தேடலோ கிடையாது. சான் பிரான்சிஸ்கோ நகரின் 'கோல்டன் கேட்' பாலம், ரிஷிகேஷின் 'லக்ஷ்மண் ஜூலா' ஆகிய பாலங்களின் வடிவமைப்புகளைப் பல்வேறு புத்தகங்கள் மூலம் தேடிப் படித்து அறிவை வளர்த்துக் கொண்டார்.
கிராம மக்களின் உடல் உழைப்பு உதவியோடு குறைந்த செலவில் உள்நாட்டுப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தனது முதல் தொங்கு பாலத்தை 87 மீட்டர் நீளத்தில் வெற்றிகரமாகக் கட்டி முடித்தார்.
முதல் பாலத்தின் வெற்றி அவரை இந்தியாவின் 'பாலங்களின் மனிதராக' மாற்றியது. அதைத் தொடர்ந்து அவர் படைத்த சாதனைகள் பல.
கர்நாடகா, கேரளா, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களில் இதுவரையில் 140-க்கும் மேற்பட்ட தொங்கு பாலங்களைக் (Suspension Bridges) கட்டியுள்ளார். வழக்கமான கான்கிரீட் பாலங்களைக் கட்டுவதற்கு ஆகும் செலவில் பத்தில் ஒரு பங்கு செலவிலேயே இந்தத் தொங்கு பாலங்களை உறுதியாகக் கட்டிக் காட்டியுள்ளார்.
பல ஆண்டுகள் எடுத்துக்கொள்ளும் ஒரு பாலத்தின் கட்டுமானப் பணியை, தனது சிறப்பான திட்டமிடலின் மூலம் வெறும் மூன்று மாதங்களில் முடித்துவிடுவார்.
கேரளாவின் அரபனபாடி பகுதியில் இவர் கட்டிய தொங்கு பாலம், ஆற்றின் இருபுறமும் இருந்த மக்களிடையே பல ஆண்டுகளாக இருந்த பகையை மாற்றி அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைத்தது. "பாலங்கள் இதயங்களை இணைக்கின்றன" என்று அவர் பெருமையுடன் கூறுகிறார்.

2017ம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது, "நான் பாலங்களை வடிவமைத்தாலும், அதற்காகக் களத்தில் இறங்கி வெயிலிலும் மழையிலும் உழைக்கும் எனது தொழிலாளர்களுக்கே இந்த விருது முழுவதும் சேரும்" என்று மிகுந்த அடக்கத்துடன் கூறினார்.
நம்மிடம் என்ன இல்லை என்பதைப் பற்றி கவலைப்படுவதை விட, நம்மிடம் உள்ள சிறு திறமையை வைத்து மற்றவர்களுக்கு எப்படி உதவ முடியும் என்று சிந்தித்துச் செயல்படுவதே உண்மையான வெற்றி.
எந்த ஒரு மாபெரும் சமூக மாற்றமும் ஒரு சாதாரண மனிதனின் சிறிய, துணிச்சலான முயற்சியில்தான் தொடங்குகிறது என்பதை நமக்கு அழுத்தமாக உணர்த்துகிறது கிரிஷின் கதை. இந்த உற்சாகத்தோடு உங்களது இன்றைய நாளைத் தொடங்குவோம்!




















