புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் ந...
புதுச்சேரி: அடுத்தடுத்து சிக்கும் போலி மருந்து தொழிற்சாலைகள்! - கோடிக்கணக்கில் நாடு முழுவதும் சப்ளை
முன்னணி நிறுவனங்களின் மருந்துகள் போலியாக தயாரிப்பு
இந்தியாவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ‘சன் ஃபார்மா’, தங்களுடைய மருந்துகள் போலியாக உற்பத்தி செய்யப்படுகின்றன என்று புதுச்சேரி சி.பி.சி.ஐ.டியில் புகார் அளித்தது. அதனடிப்படையில் புதுச்சேரி மேட்டுப்பாளையம் மற்றும் திருபுவனைப் பாளையம் தொழிற்பேட்டைகளில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு செய்தனர்.
அப்போது ரவிக்குமார் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் லார்வன் ஃபார்மா என்ற இரண்டு மருந்து தொழிற்சாலைகளும், உரிய அனுமதி பெறாமல் போலியாக மருந்துகளை தயாரித்து வந்தது தெரியவந்தது. அவற்றை உடைத்து சோதனை செய்த போது பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி உயிர்காக்கும் மருந்துகளும், தயாரிப்பு இயந்திரங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

தயாரிப்பு இயந்திரங்கள் மற்றும் போலி மருந்துகளின் மதிப்பு சுமார் ரூ.500 கோடிக்கும் மேலானவை என்று தெரிவித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், சன் ஃபார்மா, டாக்டர் ரெட்டிஸ் போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை போலியாக தயாரித்து நாடு முழுவதும் சப்ளை செய்திருப்பதாக தெரிவித்தனர்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியா முழுவதும் சுமார் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக போலி மருந்துகளை சப்ளை செய்திருப்பதாக அதிர்ச்சி அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மெய்யப்பன், ராணா என்ற இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான மதுரை ராஜா உள்ளிட்ட 10 பேர் தலைமறைவாக உள்ளனர்.
போலி மருந்து தொழிற்சாலை
இதற்கிடையில் செய்தியாளர்களை சந்தித்த அ.தி.மு.க மாநிலச் செயலாளர் அன்பழகன், ``லைசன்ஸ் இல்லாமல் செயல்பட்ட ஒரு போலி மருந்து தொழிற்சாலை ரூ.100 கோடி ஜி.எஸ்.டி செலுத்தியிருக்கிறது” என்று குற்றம் சுமத்தினார்.
அதேபோல், ``போலி மருந்து தொழிற்சாலை நடத்தியவர்களுக்கு சட்டப்பேரவையை வழிநடத்துபவர்தான் காரணம்” என்று காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கமும், முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் சபாநாயகர் செல்வம் மீது மறைமுகமாக குற்றம் சுமத்தினர்.
அதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் செல்வம், ``நாராயணசாமியும் வைத்திலிங்கமும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த விவகாரத்தில் என்னை டார்கெட் செய்கிறார்கள். அந்தப் போலி தொழிற்சாலைக்கு காங்கிரஸ் ஆட்சியில்தான் அனுமதி கொடுக்கப்பட்டது” என்று விளக்கம் கொடுத்தார்.

இப்படி இவர்கள் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், அதையடுத்து கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், ஏழு இடங்களில் சோதனை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டனர்.
அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏழு இடங்களிலும் சோதனை மேற்கொள்வதற்கு அனுமதி கொடுத்தது. அதன்படியாக 03.12.2025 அன்று ஏழு இடங்களிலும் அதிரடி ஆய்வில் இறங்கினர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். அதில் செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீசன் ஃபார்மா’ மற்றும் ஃபார்ம் ஹவுஸ்’ என்ற இரண்டு மொத்த மருந்து விற்பனை குடோன்களில் ஆய்வு செய்தனர்.
பட்டியல் நீளும்
இந்த இரண்டு கடைகளும் முக்கிய குற்றவாளியான மதுரை ராஜாவுக்குச் சொந்தமானவை என்று தெரிவித்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், ``இங்கிருந்துதான் போலி மருந்துகள் அனைத்து மருந்தகங்களுக்கும் சப்ளை செய்யப்பட்டிருக்கின்றன. 10 மாத்திரைகளில் 8 மாத்திரைகள் போலி என்ற அளவில் கலந்து விற்றிருக்கிறார்கள்.
எந்த விகிதத்தில் இங்கு போலி மருந்துகள் கலந்திருக்கிறது என்பதை ஆய்வு செய்ய மருந்துகளை எடுத்துச் சென்றிருக்கிறோம். படிப்படியாக அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்வோம்” என்று தெரிவித்தனர்.
அதேபோல் புதுச்சேரி–கடலூர் சாலையில் உள்ள பூர்ணாங்குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த போலி தொழிற்சாலையை ஆய்வு செய்தபோது, அங்கும் பெட்டி பெட்டியாக போலி மருந்துகள் இருப்பது தெரியவந்தது.

தொடர்ந்து அந்த போலி மருந்து தொழிற்சாலையின் குடோன் இடையார்பாளையத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அங்கும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அங்கு பெட்டி பெட்டியாக சப்ளை செய்யத் தயாராக இருந்த போலி மருந்துகள், அவற்றிற்கான மூலப்பொருட்கள், தயாரிப்பு மற்றும் பேக்கிங் இயந்திரங்கள் போன்றவற்றை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைப்பற்றினர்.
கைப்பற்றப்பட்ட போலி மருந்துகள் மற்றும் இயந்திரங்களின் மதிப்பு சுமார் ரூ.30 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸாரும், மருந்துக் கட்டுப்பாடுத்துறையின் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள், ``இதுவரை மூன்று தொழிற்சாலைகளையும், ஐந்து குடோன்களையும் கண்டுபிடித்து சீல் வைத்திருக்கிறோம். இனிவரும் நாட்களில் இந்தப் பட்டியல் நீளும்” என்றனர்.

















