Vikatan Digital Awards 2025 UNCUT: "Vijay Varadharaj-ன் பாராட்டு ரொம்ப முக்கியமா...
ஈரோடு: மூச்சுக்குழாயில் சிக்கிய வாழைப்பழம்; 5 நிமிடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த சோகம்
ஈரோடு மாவட்டம், அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய்சரண் (5). நேற்று இரவு சிறுவன் சாய்சரணுக்கு அவரது பாட்டி வாழைப்பழத்தைச் சாப்பிடக் கொடுத்துள்ளார்.
அதைச் சாப்பிட்ட சிறுவன் விழுங்க முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அப்போது, இருமல் வந்து புரையேறி வாழைப்பழம் உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்துள்ளது. இதனால் சிறுவனுக்கு மூச்சுவிட முடியாமல் தவித்துள்ளான்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக சிறுவன் சாய்சரணை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சாய்சரணைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், "சாய்சரண் வாழைப்பழம் சாப்பிட்டபோது, அது உணவுக்குழாய்க்குப் பதிலாக மூச்சுக்குழாயில் போய் அடைத்ததால்தான் நுரையீரலுக்குச் செல்ல வேண்டிய ஆக்ஸிஜன் தடைபட்டு, சிறுவன் உயிரிழந்துள்ளான்.
அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு வருவதற்கு முன்னரே சிறுவனின் உயிர்போயிருந்தது. வாழைப்பழம் மூச்சுக்குழாயை அடைத்த 5 நிமிடத்துக்குள் உயிர் போயிருக்க வாய்ப்புள்ளது. குழந்தைகளுக்கு வாழைப்பழம் உள்ளிட்ட பழங்களைக் கொடுக்கும்போது அவற்றை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொடுக்க வேண்டும்.
இதுபோன்று மூச்சுத்திணறல் ஏற்படும் சமயத்தில் நெஞ்சில் கை வைத்தபடி தலையை நன்கு தாழ்த்திப் பிடித்துக் கொண்டு முதுகில் வேகமாக தட்டினால் உணவுக்குழாயில் சிக்கிய பொருள் வெளியே வர வாய்ப்பு உள்ளது" என்றனர்.

















