பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, பாரதியார் இல்லம், மணப்பாடு கடற்கரை- தூத்துக்குடி முக்க...
புனே: ஷாப்பிங் செய்துகொண்டிருந்தவரை கடுமையாகத் தாக்கிய காதலன்; புகார் கொடுக்க மறுத்த இளம்பெண்
புனே பிம்ப்ரி சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள ஷாப்பிங் சென்டர் ஒன்றில் நடந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. பகல் நேரத்தில் ஷாப்பிங் சென்டரில் இருந்த துணிக்கடைக்குள் ஒரு பெண் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தார். அந்நேரம் திடீரென உள்ளே புகுந்த வாலிபர் ஒருவர் அங்கு ஷாப்பிங் செய்து கொண்டிருந்த பெண்ணை சரமாரியாக அடித்து உதைத்தார். அப்பெண்ணின் தலைமுடியைப் பிடித்து முகத்திலும், முதுகிலும் குத்தினார். அதோடு அப்பெண்ணிடம் அந்த வாலிபர் எதையோ பேசினார். மேலும் அப்பெண்ணை முடியைப் பிடித்து இழுத்து கீழே தள்ளி, அடித்து எட்டி உதைத்தார். ஆனால் நான்கு நிமிடங்கள் நடந்த இத்தாக்குதலின்போது அப்பெண் எதிர்த்து அந்த வாலிபரை தாக்கவில்லை. அப்பெண் அழுதுகொண்டே அமைதியாகத்தான் இருந்தார்.

அந்த வாலிபர் அப்பெண்ணை நோக்கி திட்டிக்கொண்டே அடித்துக்கொண்டிருந்தார். அதோடு அப்பெண்ணிடம் இருந்த மொபைல் போனை வாங்கி பார்த்தார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் மொபைல் போனை பார்த்து திட்டிய அந்த வாலிபர் அந்த போனை கீழே போட்டு உடைத்தார். அதனை பயன்படுத்த முடியாத அளவுக்கு போனை எடுத்து மீண்டும் மீண்டும் தரையில் போட்டு உடைத்தார். இந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரு சிறுவன் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பயத்தில் அங்கிருந்த டேபிள் ஒன்றுக்குள் சென்று மறைந்து கொண்டான்.
தொடர்ந்து அப்பெண்ணை அடித்த அந்த வாலிபர் ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் காலை தொட்டு கும்பிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டு, வெளியில் செல்வது போன்று சென்றார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. மீண்டும் வந்து அப்பெண்ணை எட்டி உதைத்து கையால் குத்தினார். இந்த நிகழ்வுகள் நடக்கும் போது கடை உரிமையாளர் இருந்தார். ஆனால் அவர் இதனை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. அங்கிருந்த வாடிக்கையாளர்களும் இதனை வேடிக்கைதான் பார்த்தனர். யாரும் அந்த வாலிபரை தட்டிக்கேட்க முன்வரவில்லை.
இது தொடர்பான 4 நிமிட வீடியோ சமூக ஊடங்களில் பரவியது. உடனே சம்பவம் நடந்த இடத்திற்கு போலீஸார் வந்தனர். ஆனால் போலீஸாரிடம் அப்பெண் புகார் செய்ய மறுத்துவிட்டார். இது தங்களது தனிப்பட்ட விவகாரம் என்று கூறிவிட்டார். இதனால் போலீஸார் அப்பெண்ணை அடித்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக ஊடங்களில் வெளியானவுடன் நெட்டிசன்கள் கடுமையான விமர்சனம் செய்துள்ளனர். ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், கடை உரிமையாளர் எங்கு சென்றார் என்றும், அவர் ஏன் போலீஸாரை அழைக்கவில்லை என்றும், அப்பெண்ணை அடிக்க யார் அவருக்கு அதிகாரம் கொடுத்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆனால் சிலர் பாதிக்கப்பட்ட பெண் மீதே தங்கள் கோபத்தை திருப்பினர். அப்பெண் ஏன் திருப்பித் தாக்கவில்லை என்றும், ஏன் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிடவில்லை என்றும், பொதுவெளியில் தன்னை அடிக்கும் ஒருவருடன் ஏன் தொடர்ந்து இருக்கிறாள் என்றும் கேள்விகளை எழுப்பினர். ஆனால் ஒருவர் அப்பெண்ணை தாக்கியவருக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டுள்ளார். அவர், “அவருடைய வலியையும் விரக்தியையும் மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது. அவள் அமைதியாக இருக்கிறாள், ஏனென்றால் அவள் தன் தவறுகளை உணர்ந்திருக்கிறாள். இப்போதெல்லாம் பெண்கள் தங்களுக்கு ஒரு ஆண் தேவையில்லை என்பது போல இருக்கிறார்கள். நான் அவரை ஆதரிக்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார். அந்த நபரின் கருத்துக்குப் பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.





















