அமோனியா கசிவு: "இருவர் உயிரிழப்பு; 23 பேர் ஐ.சி.யூ-வில்... விபத்துக்கு இதுதான்.....
போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மரணம்!
லெபனான் நாட்டில் நடக்கும் பயங்கரமான போருக்கு மத்தியிலும், தான் நேசித்த கடற்கரையையும், அங்கு வாழும் ஆமைகளையும் காப்பாற்ற நினைத்த ஒரு பெண்ணின் கதை சோகமாக முடிந்துள்ளது.
லெபனானின் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலரான மோனா கலீல், சமீபத்தில் நடந்த வான்வழித் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெற்கு லெபனானில் உள்ள அவரது வீட்டின் மீது குண்டுகள் விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், இரண்டு வாரப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உயிர் பிரிந்தது.

சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக லெபனான் கடற்கரையில் அழியும் நிலையில் உள்ள பச்சைக் கடல் ஆமைகளைப் பாதுகாப்பதையே மோனா கலீல் தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். வெளிநாட்டில் பல ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு சொந்த நாடு திரும்பிய அவர், உடனே இந்த ஆமை பாதுகாப்புப் பணியைத் தொடங்கினார்.
தனது தாத்தா கட்டிய பழைய வீட்டை ஒரு தங்குமிடமாக மாற்றி, அதன் மூலம் கிடைத்த பணத்தை வைத்தே ஆமைகளைப் பாதுகாக்கும் செலவுகளை அவரே பார்த்துக்கொண்டார்.
அவரது இந்த நீண்ட காலப் பயணத்தில் பல ஆபத்துகளும் எதிர்ப்புகளும் வந்தன. அந்தப் பகுதியில் வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் உள்ளூர் ஆட்களைத் தடுத்து நிறுத்தியதால், அவருக்குப் பல எதிரிகள் உருவானார்கள். ஒருமுறை அவரது வீட்டை எரிக்க முயற்சி நடந்ததோடு, அவர் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. ஆனால், இத்தகைய மிரட்டல்களுக்கு பயப்படாமல் ஆமைகளுக்குப் பாதுகாப்பான ஒரு கடற்கரையை உருவாக்குவதில் அவர் உறுதியாக இருந்தார்.
சமீபத்தில் அங்கு போர் தீவிரமடைந்தபோது, எல்லையோரக் கிராமங்களில் இருந்த மக்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேறு இடங்களுக்கு ஓடிவிட்டனர். ஆனால், 76 வயதான மோனா கலீல் மட்டும் அங்கிருந்து நகர மறுத்துவிட்டார். தான் அந்த இடத்தை விட்டுச் சென்றால், யாரும் இல்லாத அந்தக் கடற்கரையில் ஆமைகளின் முட்டைகளும் கூடுகளும் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று அவர் அங்கேயே தங்கிவிட்டார். போரின் குண்டுகளுக்கு மத்தியிலும் தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் இயற்கைக்காக நின்ற இந்த அசாத்தியமான பெண்ணின் மரணம், உலகம் முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.




















