`ஜிம்மில் வந்து பார்' - மைனர் வீராங்கனை பாலியல் வன்கொடுமை; துரோணாச்சாரியா விருத...
மகாராஷ்டிரா: வென்டிலேட்டர் வெடித்து மருத்துவமனையில் தீவிபத்து: 3 குழந்தைகள் உயிரிழப்பு
மகாராஷ்டிரா மாநிலம் அமராவதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று அதிகாலையில் குழந்தைகள் சிகிச்சை பெற்று வந்த பிரிவில் வெண்டிலேட்டர் ஒன்று திடீரென வெடித்தது. இதனால் அங்கு தீப்பிடித்துக்கொண்டது. மருத்துவமனையின் 3 வது மாடியில் உள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் 39 குழந்தைகள் சிகிச்சையில் இருந்தனர். அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அவசர அவசரமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் தீ விபத்து ஏற்பட்ட வார்டுக்கு விரைந்து வந்து குழந்தைகளை வெளியேற்றத் தொடங்கினர்.
மருத்துவ உபகரணங்கள் துண்டிக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்பட்டனர்.

குழந்தைகள் அனைவரும் வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு துறையினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும் 3 குழந்தையில் தீ மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னையால் உயிரிழந்தனர். மேலும் தீவிபத்தில் படுகாயம் அடைந்த 6 குழந்தைகள் அருகில் உள்ள வேறு ஒரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
போலீஸ் துணை கமிஷனர் உட்பட மூத்த போலீஸ் அதிகாரிகள் சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்து நிலைமையை நேரில் ஆய்வு செய்து விசாரணையைத் தொடங்கினார்கள். இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவு மூன்று பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. மூன்று பிரிவிலும் இத்தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்து சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களை டாக்டர்கள் சமாதானப்படுத்தினர்.




















