`தமிழகத்தில் மின்தடைகளை முற்றிலுமாக ஒழிக்க புதிய திட்டம் உடனடி அமல்' - ‘RTEP’ என...
மும்பை: கர்ப்பிணிக்குச் சிகிச்சையளிக்க தாமதம்; பெண் மருத்துவரைத் தாக்கிய சிவசேனா கவுன்சிலர்
மும்பை புறநகர் பகுதியில் அமைந்துள்ள டோம்பிவிலியில் உள்ள சாஸ்திரிநகர் மருத்துவமனையில், பிரியங்கா (33) என்ற கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டு இருந்தார். ஆனால் குழந்தை வயிற்றில் மாறி இருந்ததால் சிசேரியன் மூலம் குழந்தையைப் பிறக்க செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். அதற்கு நியோநேட்டல் தீவிர சிகிச்சை பிரிவு (NICU) படுக்கை தேவையாக இருந்தது.
ஆனால் அந்த மருத்துவமனையில் இருந்த அனைத்து படுக்கைகளும் நிரம்பி இருந்தது. எனவே மாற்று படுக்கைக்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய முயன்றபோது சிசேரியனுக்குத் தாமதம் ஏற்பட்டது. இதனால் கர்ப்பிணிப் பெண்ணின் உறவினர்கள் உள்ளூர் சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மாத்ரேயிக்கு தகவல் கொடுத்தனர். அவர் தனது ஆதரவாளர்களுடன் மருத்துவமனைக்கு வந்தார்.

அவரிடம் என்.ஐ.சி.யூ (NICU) படுக்கை தேடுவதற்கான மருத்துவக் காரணங்களை விளக்க பெண் மகப்பேறு மருத்துவர் முயன்றார். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ரமேஷ் மாத்ரே பெண் மருத்துவரைத் தாக்கினார். ரமேஷ் மாத்ரே தாக்குதலைத் தொடங்கிய உடனேயே, அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனைக்குள் புகுந்து அங்கிருந்த மற்ற இரண்டு மருத்துவர்களையும், பணியில் இருந்த மூன்று செவிலியர்களையும் கொடூரமாகத் தாக்கினர்.
தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோதே, அந்தப் பெண் மருத்துவர் தனது கைபேசி மூலம் உதவிக்கு அழைக்க முயன்றுள்ளார். மேலும், வன்முறைக் கும்பலைத் தடுக்க அவர் கடுமையாகப் போராடியதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த வன்முறையாளர்கள் பெண் மருத்துவரின் கைபேசியைப் பறிக்க முயன்றபோது, அவர் ஒரு மேசைக்குப் பின்னால் சென்று மீண்டும் போனைப் பயன்படுத்த முயன்றார். அப்போது, கவுன்சிலர் பின்னால் இருந்து மிகக் கொடூரமாகத் தாக்கியதில், பெண் மருத்துவரின் கையில் இருந்த போன் கீழே விழுந்தது. அதன் பிறகும் கவுன்சிலர் மற்ற ஊழியர்களையும் தொடர்ந்து தாக்கினார்.
டாக்டர் வைபவ் சாளுகே அளித்த புகாரின் பேரில், விஷ்ணு நகர் போலீசார் சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே உட்பட 5 பேர் மீது மகாராஷ்டிரா மருத்துவ சேவை நபர்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வன்முறை தாக்குதல் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.
மூன்று நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த அந்தச் சிசிடிவி காட்சியில் கவுன்சிலர் மற்றும் அவரது ஆட்கள் மருத்துவமனை ஊழியர்களைக் கொடூரமாகத் தாக்கியதையும், ஒரு பெண் மருத்துவரைத் தாக்கி அவரது கைபேசியைப் பறித்தததும் பதிவாகி இதுந்தது.
இந்தக் கொடூரத் தாக்குதலைத் தொடர்ந்து கல்யான்-டோம்பிவலி மாநகராட்சி மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.





















