தாய்மொழி தினம்: "வநக்கம் டமில் மக்களே!" - அரசியல் மேடைகளில் அரங்கேறும் 'மொழியியல...
மும்பை: குடும்பத்தோடு ஒரு மாதம் டிஜிட்டல் கைது; முதியவர் ரூ.1.83 கோடியைப் பறிகொடுத்தது எப்படி?
மும்பையில் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டு பணம் மோசடி செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. மும்பை மட்டுமல்லாது நாடு முழுவதும் இந்த மோசடிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
இந்த மோசடியை மத்திய விசாரணை ஏஜென்சிகளால் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை இருந்து வருகிறது. மும்பையில் புதிதாக ஓய்வுபெற்ற வங்கி அதிகாரியையும், அவரது குடும்பத்தினரையும் டிஜிட்டல் முறையில் கைது செய்த சைபர் மோசடி கும்பல் ரூ.1.83 கோடியை அபகரித்துள்ளது.
மும்பை முலுண்ட் பகுதியில் வசிக்கும் அசோக் மகாதேவ் சால்வி(62) என்ற ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்குக் கடந்த மாதம் 7 ஆம் தேதி ஒரு பெண் போன் செய்தார். வங்கி அதிகாரியிடம் அப்பெண் உங்களது ஆதார் கார்டைப் பயன்படுத்தி வாங்கப்பட்ட சிம் கார்டைப் பயன்படுத்தி சட்டவிரோத மற்றும் ஆட்சேபரமான மெசேஜ் அனுப்பப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.

அதோடு அதற்காக உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அப்பெண் போனை வேறு ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்தார். அந்த நபர் தன்னை இந்திய தகவல் தொலைத்தொடர்புத்துறை அதிகாரி என்று கூறிக்கொண்டார்.
போனில் பேசிய நபர் மும்பை திலக் நகரிலிருந்து சால்வி என்ற பெயரில் சிம் கார்டு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அதோடு ஆதார் கார்டு விபரங்கள் கிரிமினல் செயல்பாடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரிக்க மும்பை பாந்த்ராவில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்தார்.
அதன் பிறகு அதே நபர் போனை வேறு ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்தார். அதில் பேசிய நபர் தன்னை குற்றப்பிரிவு அதிகாரி என்று கூறிக்கொண்டார். அதன் பிறகு மற்றொருவர் போனில் வந்து தன்னை டெல்லி சி.பி.ஐ அதிகாரி என்று தெரிவித்தார். அதோடு ஜெயபிரபாகர் என்பவர் போனில் வந்து தன்னை ஐ.பி.எஸ் அதிகாரி என்று தெரிவித்தார்.
அவர் வங்கி அதிகாரியிடம், நீங்கள் வங்கிக் கணக்கு ஒன்று திறந்து அதனை விற்பனை செய்துவிட்டதாகவும், அந்த வங்கிக் கணக்கைப் பயன்படுத்தி ரூ.2 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அக்கும்பல் வீடியோ காலில் வந்தது. அதில் அவர்களது முகம் சரியாகத் தெரியவில்லை. ஆனால் வங்கி அதிகாரி, அவரது மனைவி மற்றும் மகளிடம் தொடர்ந்து ஒரு அறையில் இருக்கும்படியும், இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை தங்களுக்குத் தகவல் கொடுக்கவேண்டும் என்றும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இது ஒரு ரகசிய விசாரணை என்றும் தெரிவித்தனர்.
மேலும் சுப்ரீம் கோர்ட் மற்றும் அமலாக்கப்பிரிவு ஆவணங்களையும் அனுப்பி வைத்தனர். அதில் பணமோசடி வழக்கில் சால்வி பெயர் இடம் பெற்று இருந்தது. இதையடுத்து பயந்து சால்வி தனது குடும்பத்தில் உள்ள சொத்து விவரங்களைத் தெரிவித்தார்.
ஜனவரி 8 ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாட்ஸ்அப் மூலம் குடும்பத்தின் சொத்துகள் மற்றும் சொத்துகளின் விவரங்களைப் பெற்றனர். ஜனவரி 14 ஆம் தேதி அவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் இருந்து அனுப்பியது போன்ற ஒரு கடிதத்தை அனுப்பினர். அதில் வங்கிக் கணக்கு விவரங்கள் இருந்தன.
சால்வியிடம் இருக்கும் நிதியைத் தாங்கள் அனுப்பி இருக்கும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்படியும், அவற்றைச் சரிபார்க்க வேண்டியிருப்பதாகவும், நிரபராதி என்று கண்டறியப்பட்டால் பணம் திரும்பக் கொடுக்கப்பட்டுவிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

சால்வியும் தன்னிடம் இருந்த பணத்தை அவர்கள் சொன்ன வங்கிக் கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தார். அதோடு தனது குடும்பத்து தங்க நகைகள், வைப்புத் தொகை, ஷேர்களை விற்று அல்லது அடமானம் வைத்து அதில் கிடைத்த பணத்தையும் அனுப்பி வைத்தார்.
இப்படியே மொத்தம் ரூ.1.83 கோடியை அனுப்பினார். கடந்த 11 ஆம் தேதிதான் அக்கும்பல் திடீரென சால்வி குடும்பத்தைத் தொடர்பு கொள்வதை நிறுத்தியது. அதன் பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை சால்வி அறிந்து இது குறித்து சைபர் பிரிவு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


















