அரண்மனையில் திருமண ஏற்பாடு; புனே கோட்டையில் மரணம் - இளம் தொழிலதிபர் வழக்கில் சிக...
மெஸ்ஸியின் புதிய உலக சாதனை: ஆஸ்திரியாவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!
உலகக்கோப்பை கால்பந்து வரலாற்றில் லியோனல் மெஸ்ஸி ஒரு புதிய சாதனை படைத்து, புது சரித்திரம் எழுதியுள்ளார். விறுவிறுப்பாக நடந்த உலகக்கோப்பை போட்டியில், அர்ஜென்டினா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அதிகாரப்பூர்வமாக அடுத்த சுற்றுக்கு (Round of 32) தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடந்த இந்த முக்கியமான போட்டியில், அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸி, பெனால்டி வாய்ப்பைத் தவறவிட்டாலும், பின்னர் இரண்டு சூப்பர் கோல்களை அடித்து தனது அணியை வெற்றி பெற வைத்தார்.

ஆட்டம் தொடங்கிய 8-வது நிமிடத்திலேயே அர்ஜென்டினா அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மெஸ்ஸி அடித்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியே சென்றதால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும் சோர்ந்து போகாமல் ஆடிய மெஸ்ஸி, 38-வது நிமிடத்தில் ஒரு சூப்பர் கோல் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இந்த கோலின் மூலம், உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோசேயின் சாதனையை (16 கோல்கள்) மெஸ்ஸி முறியடித்தார்.
இரண்டாவது பாதியில் ஆஸ்திரிய அணி கோல் அடிக்க எடுத்த முயற்சிகளை அர்ஜென்டினா வீரர்கள் தடுத்து நிறுத்தினர். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்ஸி மீண்டும் ஒரு கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தார். இந்த அபார வெற்றியின் மூலம் அர்ஜென்டினா அணி (குரூப் ஜே) பிரிவில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கான தகுதியை உறுதி செய்துள்ளது. மேலும் உலகக்கோப்பையில் தனது மொத்த கோல்களின் எண்ணிக்கையை 18 ஆக உயர்த்தியுள்ளார் மெஸ்ஸி.

மைதானத்தில் மெஸ்ஸி காட்டி வரும் அசாத்தியமான ஆட்டத்திறனும் சுறுசுறுப்பும் ஒட்டுமொத்த கால்பந்து உலகையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் இதுவரை 5 கோல்களை அடித்து, அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் நீடிக்கிறார். ஆரம்பத்தில் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டாலும், ஆட்டத்தின் கடைசி நிமிடம் வரை பதற்றப்படாமல் மிகச் சிறப்பாக விளையாடி அணியை வழிநடத்திய மெஸ்ஸியின் இந்த ஆட்டம், ஏன் அவர் உலகின் மிகச்சிறந்த வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.!
















