மும்பையில் செட், 2 ஹோஸ்ட்! களமிறங்கும் பிக்பாஸ் வின்னர்.! விஜய் டிவியில் விரைவில...
மேகதாது அணை: `புதிய நடுவர் மன்றத்தை தமிழ்நாடு அரசு நாடுவதே ஏன்?' - தங்கம் தென்னரசு விளக்கம்
மேகதாது அணைப் பிரச்னை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தின் மூன்றாம் நாளான இன்று, மேகதாது அணைமீதான தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது.
இந்தத் தீர்மான விவாதத்தில் அ.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர். இதில் திமுக மும்மொழிந்த ஒரு திருத்தம் அந்தத் தீர்மானத்தில் இணைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``தற்போதையச் சூழலில் திமுக முன்மொழிந்த இந்தத் திருத்தத்தின் அவசியம் மற்றும் டெல்டா பகுதி விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதில் இதன் முக்கியத்துவத்தை விளக்க வேண்டியது கடமையாகிறது.

கடந்த 2018 ஜனவரி 22 அன்று மத்திய நீர்வள ஆணையம் (CWC) சில நிபந்தனைகளுடன் விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்க கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தியது. இதை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் கடந்த 2025 டிசம்பர் 13 அன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மத்திய நீர்வள ஆணையம் சில நிபந்தனைகளோடுதான் இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. அதேவேளையில், தமிழ்நாட்டின் ஆட்சேபனைகள் உள்ளிட்ட நிபந்தனைகளை மீறி கர்நாடகா தொடர்ந்து DPR தயாரிப்பில் ஈடுபட்டால், அதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்தை நாட தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.
மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பதில் தமிழ்நாடு எப்போதும் உறுதியாக இருந்து வந்துள்ளது. கர்நாடகாவில் பா.ஜ.க அல்லது காங்கிரஸ் என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், காவிரி இறுதித் தீர்ப்புக்கு எதிராக அவர்கள் மேகதாதுவில் அணை கட்டுவதில் தொடர்ந்து பிடிவாதமாக உள்ளனர்.
இந்த விவகாரத்தை நாம் கவனமாகக் கையாளத் தவறினால், இது மீண்டும் மத்திய நீர்வளத் துறை அதிகாரிகளின் முடிவுக்குச் சென்று, தமிழ்நாடு ஒரு கிடுக்கிப்பிடியில் (Trap) சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. மேலும், மேகதாது பிரச்னை என்பது காவிரி நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தால் ஏற்கனவே தீர்க்கப்பட்ட விவகாரங்களைத் தாண்டி, முற்றிலும் ஒரு 'புதிய நதிநீர் தாவா' ஆகும்.

மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவாதச் சட்டத்தின்படி, மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனையின் அடிப்படையில், மேகதாது பிரச்னைக்கு புதிய நடுவர் மன்றத்தை நாடுவதே சாலச்சிறந்தது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கடந்த 2026 மார்ச் 4-ம் தேதி புதிய நடுவர் மன்றம் அமைக்கக் கோரி ஒன்றிய அரசுக்குத் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புதிய நடுவர் மன்றம் அமைப்பதால், 2018 பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காவிரி இறுதித் தீர்ப்புக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அத்தீர்ப்பை இது எவ்விதத்திலும் மறுபரிசீலனை செய்யாது.
இதற்கு முன்னோடியாக, 2018-ல் பெண்ணையாறு விவகாரத்திலும் இதேபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு 2019-ல் நடுவர் மன்றம் கோரப்பட்டது நினைவுகூரத்தக்கது. இந்தத் திருத்தத்தைத்தான் சட்டமன்றத்தில் திமுக முன்வைத்தது. முதல்வரும் இதை ஏற்றுக்கொண்ட பிறகே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இச்சூழ்நிலையில், இந்த விவகாரத்தை மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கி நமக்குள்ளே அரசியல் பிளவுகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவது கர்நாடக அரசுக்கே சாதகமாக அமைந்துவிடும். பெங்களூரு குடிநீர் பிரச்னை என்ற போர்வையில் கர்நாடகா இதில் தனியாக வெற்றி பெற முயல்வதைத் தடுக்கவே இந்த உத்தி கையாளப்பட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டில் நமக்குக் கிடைத்துள்ள உரிமைகளைப் பாதிக்காத வகையில், மேகதாது பிரச்னைக்காக தனி நடுவர் மன்றம் கோரும் இந்த முடிவை, அரசியல் மாச்சரியங்களைக் கடந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓரணிலிருந்து ஒருமனதாக ஆதரித்து ஒற்றுமையைக் காக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.











