ஹெலிகாப்டர் விபத்து: `6 மணி நேரம் என் மார்பில் கிடந்தார்'- திருமணமான சில மணி நேர...
ராம் சரண் Bodyguard சம்பளம் ஒரு நாளுக்கு 4 லட்சமா? - யார் இந்த கெவின் குண்டா?
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரண், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த தொழில்முறை தற்காப்புக் கலை (MMA) வீரரான கெவின் குண்டா (Kevin Kunta) என்பவரைத் தனது தனிப்பட்ட பாதுகாவலராக நியமித்துள்ளார்.
ராம் சரண் நடித்துள்ள `பெத்தி' (Peddi) திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில், கெவின் குண்டா அவருடன் வலம் வந்த வீடியோக்கள், புகைப்படங்கள் இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து இவர் யார் என்ற தேடல் சமூக வலைதளங்களில் அதிகரித்தது.

கெவின் குண்டாவிற்கு ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் பாதுகாவலர்களில் இவரும் ஒருவராக இருப்பார். இருப்பினும், இந்த சம்பள விவரம் குறித்து ராம் சரண் தரப்பிலிருந்தோ அல்லது கெவின் தரப்பிலிருந்தோ எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
யார் இந்த கெவின் குண்டா?
இவருடைய உண்மையான பெயர் அப்து காதிர் சோவே (Abdou Kadirr Sowe). 1998-ம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் பிறந்தார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தற்போது இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் வசித்து வருகிறார். இவர் ஐரோப்பாவில் மிடில்வெயிட் பிரிவில் சண்டையிடும் ஒரு சர்வதேச தொழில்முறை மிக்ஸட் மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரர் ஆவார். Tapology என்ற இணையதளத் தரவுகளின்படி, இவர் இதுவரை 4 வெற்றிகளையும், 6 தோல்விகளையும் பதிவு செய்துள்ளார். இவரது கடைசி அதிகாரபூர்வப் போட்டி 2025 நவம்பரில் நடைபெற்றது.

காம்பியா மல்யுத்த சங்கம் இவரை `மாமா லாமின் ஆஃப் பார்ரா' (Mama Lamin of Barra) என்ற பெயரில் அழைக்கிறது. திரைப்பட விழாக்களில் ராம் சரணுடன் வரும்போது, கோட் சூட் அணிந்து ஹாலிவுட் பட பாணியில் மிகவும் மிடுக்காகத் தோற்றமளிப்பார். நெரிசலான இடங்களில் கூட்டத்தை மிக எளிதாகக் கையாளுவதில் இவர் வல்லவர்.
ராம் சரணுடன் எத்தனை வருடப் பழக்கம்?
பலரும் இவர் சமீபத்தில் தான் ராம் சரணின் பாதுகாவலராகப் பணிக்குச் சேர்ந்தார் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ராம் சரண், "கெவின் கடந்த 4 ஆண்டுகளாக எங்கள் குடும்பத்துக்காகப் பணிபுரிந்து வருகிறார். நாங்கள் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போதெல்லாம் அவர் தான் பாதுகாப்புக்காக வருவார்" என்று குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையேயான நீண்டகால நம்பிக்கையும், நட்பும் இருக்கிறது.

தனது பாதுகாவலர் திடீரென இணையத்தில் வைரலானது குறித்துப் பேசிய ராம் சரண், நகைச்சுவையாக சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். "நீங்கள் அனைவரும் அவரை மிகவும் பிரபலமாக்கிவிட்டீர்கள். அதனால் நான் இப்போது அவரைத் தனியாக வெளியே அனுப்புவதே இல்லை. யாராவது அவருக்கு ஒரு சாக்லேட்டோ, பிஸ்கட்டோ லஞ்சமாகக் கொடுத்து என்னைப் பற்றிய ரகசியங்களைக் கேட்டு விடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது!" என்று சிரித்துக்கொண்டே கூறினார்.
இந்திய ரசிகர்களின் இந்த எதிர்பாராத அன்பைக் கண்ட கெவின் குண்டாவும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டுள்ளார். ஒரு ஹாலிவுட் ரேஞ்ச் பாதுகாவலரை ராம் சரண் நியமித்திருப்பது அவரது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மைதான்.


















