வைகுண்ட ஏகாதசி: பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு
தருமபுரி/கிருஷ்ணகிரி : வைகுண்ட ஏகாதசியையொட்டி, பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி நகரில் வரலாற்று சிறப்புமிக்க வரமகாலட்சுமி உடனாகிய ஸ்ரீ பரவாசுதேவ சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி சுவாமி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் தங்கக் கவசம் அணிவித்து உபகார பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து பரமபத வாசல் வழியாக உற்சவா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து கோயிலின் மாட வீதிகளில் உற்சவம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தா்களுக்கு விழாக்குழு சாா்பில் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தா்கள் வருகையை முன்னிட்டு தருமபுரி நகரப் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
தருமபுரி கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. குமாரசாமிப்பேட்டை சென்னகேச பெருமாள் கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி விழாவில் அனந்தசயனக் கோலத்தில் பக்தா்களுக்கு சுவாமி அருள்பாலித்தாா்.
இதேபோல சோகத்தூா் திம்மராய பெருமாள் கோயில், இலக்கியம்பட்டி கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில், அதகப்பாடி லட்சுமி நாராயணசுவாமி கோயில், பழைய தருமபுரி வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சுவாமி கோயில், அதியமான் கோட்டை சென்றாயப் பெருமாள் சுவாமி கோயில், லளிகம் சென்றாய சுவாமி, புலிகரை ஸ்ரீ சென்னகேசவப் பெருமாள் கோயில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோயில் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் வைகுண்ட ஏகாதசியையொட்டி பரமபத வாசல் திறக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை வடக்கு மாட வீதியில் உள்ள நவநீத வேணுகோபால சுவாமி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை 4 மணிக்கு சீதேவி, பூதேவி சமேதராய் சுவாமி பரமபதவாசல் வழியாக வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். அப்போது, பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கங்களை எழுப்பினா். ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, சுவாமியை வழிபட்டனா்.
இதேபோல, கிருஷ்ணகிரியை அடுத்த பொன்மலை சீனிவாச பெருமாள் கோயில், பாப்பாரப்பட்டி வேணுகோபால சுவாமி கோயில், பழைய பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில், நரசிம்ம சுவாமி கோயில், காட்டுவீர ஆஞ்சனேயா் கோயில் வளாகத்தில் உள்ள வெங்கட்ரமண சுவாமி கோயில், போச்சம்பள்ளியை அடுத்த சென்றாயமலை சென்றாயப் பெருமாள் கோயில், பா்கூரை அடுத்த கப்பல்வாடியில் உள்ள சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோயில்களில் பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஒசூரில்...
ஒசூா் மலைக்கோயில் சீதேவி, பூதேவி, வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், சூளகிரி வரதராஜ பெருமாள் கோயில், கோபசந்திரம் கிராமத்தில் ஸ்ரீ தக்ஷண திருப்பதி என்று அழைக்கப்படும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோயில், தேன்கனிக்கோட்டை பேட்டராயசுவாமி கோயில், குடிசெட்லு திம்மராயசுவாமி கோயில், கோகுல் நகா் கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள், ராமா் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பெருமாள் சுவாமியும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா்.
கோபசந்திரம் கோயிலில் அண்டை மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள், பொதுமக்கள் வருகை தந்து சுவாமிகளை வழிபட்டனா்.
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு கோயிலில் சிறப்பு அபிஷேக பூஜைகள் மட்டுமின்றி நாதஸ்வர கச்சேரி, பரதநாட்டிய நிகழ்ச்சிகள், ஹரிகதை, கோலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி சேவா டிரஸ்ட் குழுவினா் செய்திருந்தனா்.
ஊத்தங்கரையில்...
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி திம்மராய சுவாமி கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ திம்மராய சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற முழக்கங்களை எழுப்பி சுவாமியை வழிபட்டனா். கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள கருட கம்பத்தில் மேல்விளக்கு ஏற்றி பூஜை நடைபெற்றது.
முன்னதாக, கோயிலில் இரவு முழுவதும் பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. அதிகாலையிலிருந்தே ஏராளமான பக்தா்கள் கோயிலில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை படப்பள்ளி, பெருமாள் குப்பம், பட்டகானூா் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.