`இதற்கு பில் கேட்ஸ் பதிலளிக்க வேண்டும்!' - எப்ஸ்டீன் ஃபைல்ஸ் குறித்து முன்னாள் ம...
வைத்தி என்ட்ரியால் ஒரத்தநாடு அவுட்; தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர்? - தகிக்கும் திமுக ரேஸ்
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, எந்த தொகுதி யாருக்கு என்பது குறித்த பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.
தஞ்சாவூர் தொகுதியில் அதிமுக-வில் மாநகரச் செயலாளர் என்.எஸ்.சரவணன் வேட்பாளரர் என்பது உறுதியாகி விட்டதாக சொல்கிறார்கள். சரவணனும் வார்டு வாரியாக பிரச்சாரத்தை தொடங்கி விட்டார். ஆனால் திமுக-வை பொறுத்தவரை தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு பலத்த போட்டி நிலவுவதை காண முடிகிறது.
சீட்டுக்கான ரேஸில் முந்துவதற்கு முக்கிய நிர்வாகிகளில் தங்களுக்கு தெரிந்த மேலிட தொடர்பு மூலம் முயற்சித்து வருகின்றனர். சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், எஸ்.எஸ்.ராஜ்குமார், செந்தமிழ்செல்வன், உதயநிதி உள்ளிட்ட பலர் தொகுதியை கைப்பற்ற மல்லுக்கட்டி வருகின்றனர்.
முதலில், ஒரத்தநாடு தொகுதியில் எம்.இராமச்சந்திரன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, நடிகர் துரை.சுதாகர், எல்.ஜி.அண்ணா, கலைமணி இளையபாரதி, மகேஸ் கிருஷ்ணசாமி ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பேசப்பட்டது. இவர்களும் வாய்ப்புக்காக தீவிரமாக மெனக்கெட்டு வந்தனர்.
அணிமாறிய வைத்தி... குழப்பத்தில் உடன் பிறப்புகள்!
ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து களத்தில் மல்லுக்கட்ட, பண பலத்துடன் அவரை வீழ்த்த சரியான நபர் நடிகர் சுதாகர் என திமுக தலைமை கருதியது. மேலிடத்தில் உள்ள நெருங்கிய தொடர்பும், பசை செலவு செய்வதிலும் வலுவானவர் என்பதால் சுதாகர் தான் ஒரத்தநாடு வேட்பாளர் என பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம் அணியிலில் இருந்து விலகி திமுகவிற்குள் ஐக்கியமானார்.

தற்போது, ஒரத்தநாடு தொகுதி வைத்திலிங்கத்திற்கு தான் சொல்லப்படுகிறது. 2016-ம் ஆண்டை தவிர தொகுதியை தொடர்ந்து அவர் தக்க வைத்திருப்பது முக்கிய காரணம். இதற்கிடையில் , ஒரத்தநாடு நமக்கு தான் வாய்ப்பு கிடைக்கும் சீட்டுக்காக காத்திருந்தவர்கள் இப்படி ஒரு டிவிஸ்ட்டை எதிர்பார்க்கவில்லை.
சீட்டுகாக முயற்சித்த பலர் இந்த ஷாக்கிலிருந்து இதுவரை மீளவில்லை. இதையடுத்து நடிகர் துரை.சுதாகர், அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா ஆகியோர் அப்படியே யூடர்ன் அடித்து தஞ்சாவூர் தொகுதியை கைப்பற்ற கவனம் செலுத்துவதால் தஞ்சாவூர் திமுக களத்தில் அனல் பறக்கிறது.
ஒரத்தநாடு இல்லைனா.... தஞ்சாவூர் - பெருகும் போட்டி!
இது குறித்து விபரம் அறிந்த புள்ளிகள் சிலரிடம் பேசினோம், ``தஞ்சாவூர் தொகுதியை பொறுத்தவரை மேயர் சண்.இராமநாதன் தான் வேட்பாளர் என பரவலாக பேசப்பட்டது. திமுக மேலிடம் தயாரித்து வைத்திருந்த உத்தேச பட்டியலிலும் இராமநாதன் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனாலும் சிட்டிங் எம்.எல்.ஏ டி.கே.ஜி.நீலமேகம், செந்தமிழ்செல்வன், உதயநிதி ஆகியோர் இப்போது வரை முயற்சியை நிறுத்தவில்லை.

உதயநிதி பிறந்தநாளில் அவரை சந்தித்து வாழ்த்தினர். அப்போது நீலமேகம் அவருக்கு பெரிய வீணையும், செந்தமிழ்செல்வன் விலை உயர்ந்த அழகிய வளர்ப்பு நாய் ஒன்றையும் பிறந்தநாள் பரிசாக உதயநிதியிடம் அளித்தனர்.
இப்படி ஒவ்வொருவரும் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கவர்வதற்கு மெனக்கெடுகின்றனர். இந்நிலையில் தான், ஒரத்தநாடு வைத்திலிங்கத்திற்குத்தான் என்பதால் டாக்டர் அஞ்சுகம் பூபதி, துரை.சுதாகர் ஆகியோர் தஞ்சாவூர் தொகுதியில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
நீலமேகம்
சமீபத்தில் மண்டல பொறுப்பாளரான கே.என்.நேருவை சந்தித்த நீலமேகம், `என்னை பற்றி தவறான தகவல்களை சொல்லி என்னை உங்களிடம் இருந்து சிலர் பிரித்து விட்டனர். நான் அது போல் கிடையாது, எப்போதும் தலைவருக்கு விசுவாசமாக இருப்பவன் என்பது உங்களுக்கு தெரியும். எதையும் மனசுல வச்சிக்காம இந்த முறை எனக்கு மீண்டும் வாய்ப்பு வாங்கி கொடுங்கள், அதற்கான நன்றியுடன் இருப்பேன்' என்றிருக்கிறார்.

அஞ்சுகம் பூபதி
அரசு டாக்டராக பணி புரிந்த டாக்டர் அஞ்சுகம் பூபதி, அந்த வேலையை உதறிவிட்டு அரசியலுக்கு வர எடுத்ததுமே தஞ்சாவூர் தொகுதியை தந்தது தலைமை ஆனால் சில காரணங்களால் அவர் தோல்வி அடைந்தார். முதல்வர் ஸ்டாலின் வீட்டு கிச்சன் வரை செல்லக்கூடிய நம்பிக்கையை பெற்ற, குடும்பத்தில் ஒருவராக இருக்கிறார் அஞ்சுகம் பூபதி.
கட்சிக்காக தான் பார்த்தை வேலையை உதறியவர் என்பதால் ஸ்டாலின் அவருக்கு எதாவது செய்ய வேண்டும் என்கிற மன நிலையுடன் இருக்கிறார். கடந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவி ஒதுக்குவதாக இருந்த நிலையில் கடைசி நேரத்தில் வாய்ப்பு கை நழுவி சண்.இராமநாதனுக்கு சென்றது. இந்த முறை சட்டமன்றத் தேர்தலில் தனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும், முதல்வர் கை விடமாட்டார் என்கிற நம்பிக்கையில் இருக்கிறார் அஞ்சுகம்.
சண்.இராமநாதன்
சண்.இராமநாதனை பொறுத்தவரை முதல்வர் குடும்பத்திற்கு நெருக்கமான உறவினர். அதை பெரிதாக வெளியே காட்டி கொள்ளாமல் கட்சி பணிகளை செய்யக்கூடியவர். சென்னை சென்றால் அறிவாலயம் சென்று தலைவரை சந்திக்க கூட நினைக்க மாட்டார். ஆனால் கொடுத்த வேலையை சிறப்பாக செய்வார். நலிவடைந்த கட்சியின் முன்னாள் நிர்வாகிகளுக்கான ஒவ்வொரு மாத மருத்துவச் செலவிற்கு சத்தமில்லாமல் உதவி செய்கிறார். இவரால் நூறுக்கும் மேற்பட்டவர்கள் பயனடைகின்றனர். உதயநிதியின் குட் புக்கில் இருக்கும் இராமநாதனுக்கு சீட் கிடைக்கும் என உறுதியாக பேசப்பட்டது.

வட்டமடிக்கும் புதிய தகவல்!
இப்படியான சூழலில் நடிகர் துரை.சுதாகருக்கு தஞ்சாவூர் தொகுதி உறுதியாகி விட்டதாகவும், சத்தமில்லாமல் அவர் தேர்தல் பணியை தொடங்கி விட்டார் என்றும் கிளம்பியிருக்கும் தகவல் பலருக்கு ஆச்சர்யத்தை தந்துள்ளது.
முக்கிய பொறுப்பில் இல்லை என்றாலும் திமுக விசுவாசியான இவர், அமைச்சர் மா.சுப்ரமணியனுக்கு நெருக்கமானவர். உதயநிதி பிறந்தநாளில் பாரம்பர்ய நெல் ரகங்களை எங்கும் பரவலாக்கி பரப்பும் வகையில், 48 விவசாயிகளுக்கு 48 வகையான பாரம்பர்ய விதை நெல் கொடுத்து பலராலும் கவனம் பெற்றது.
முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் தஞ்சாவூருக்கு வந்தால் நாளிதழில் ஒரு பக்கம் விளம்பரம் கொடுப்பது இவரின் வழக்கம். இது திமுகவினர் மத்தியில் இப்போதும் பேசு பொருளாக இருக்கிறது. தாரளமாக செலவு செய்யக்கூடியவர் என்ற அடையாளத்துடன் வரும் சுதாகர் போட்டியிடுவதற்கு தஞ்சாவூர் தொகுதியை தலைமை ஓகே செய்து விட்டதாக சொல்கிறார்கள் ஒரு தரப்பினர். எனினும் சீட்டுக்கான ரேஸ் பட்டியலில் உள்ளவர்கள் ஓட்டத்தை நிறுத்தாமல் தொடர் முயற்சியில் இருக்கின்றனர். தேர்தல் நெருக்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம், தஞ்சாவூர் தொகுதி யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றனர்.















